(தலித் முரசு நவம்பர் 2007)

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப்புலம்
- இளம்பரிதி
_
இனியும் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது
இரத்தத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை
வாசிப்பது பேரரசருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்குமானால்
இழுக்கற்றதாகக் கிடக்கட்டும் எங்கள் பிணங்கள்
- விக்டர் செகலென்
கருப்பு ஞாயிறுகளின் வரலாறு தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் ‘சுனாமி’ எனும் கடற்கோள் அழிவு துவக்கி வைத்த மரண ஓலம், இந்த ஆண்டின் இறுதியில் சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளத்தால் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பெருமழை தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றியதன் விளைவு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலத்தினின்று பெயர்ந்து நீரில் அமைந்தது. தற்காலிகமாகவே எனினும் வெள்ள நீரால் வீடுகள், வயல்வெளிகள், பயிர்கள், சாலைகள் என அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாகி இயல்பு வாழ்க்கை சீர்கெட்டது. மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை முன்னூரைத் தாண்டியது. பட்டுக் கோட்டைக்கு அருகிலும் இராமநாதபுரம் மாவட்டம் சனவேலிக்கு அருகிலும் இரண்டு பேருந்துகள் வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்தது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னே, மனித எதிர்வினை செயலற்றுப் போனது. இது புரிந்து கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூட சாத்தியமுள்ளது.
ஆனால் தமிழகத்தின் தலைநகரில் நாற்பது நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருக்கும் கொடூர நிகழ்வுகள் இயற்கையின் பேராற்றலையே எள்ளி நகையாடச் செய்து விட்டன. கடந்த அக்டோபர் மாத இறுதியில் 26, 27 தேதிகளில் பெய்த பெரு மழையில் தலைநகர் சென்னை தத்தளித்தது. வடசென்னையின் தாழ்வான பல பகுதிகள் நீரில் மிதந்தன. குறிப்பாக வியாசர்பாடியை உள்ளடிக்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வாரகாலம் ஆனது. உழைக்கும் மக்களின் ஒண்டுக்குடித்தன வாழ்க்கை, அற்ப-சொற்ப உடைமைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இழந்த மக்கள் ஏங்கி நின்றனர். குமுறிய மக்கள் வீதிக்கு வந்தனர். சாலை மறியல், உண்ணாவிரதம் என நிவாரணம் வேண்டி ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்தன. அரசு எந்திரம் ஆலோசித்தது. அவசர கதியில் நிவாரண நடவடிக்கைகளில் இறங்கியது. அதிகார தலைக்கணம் எச்சில் காவுகளை நிவாரணம் என்ற பெயரில் வீதியில் வீசியெறிந்து தலைப்பட்டது. இதை இப்படியில்லாமல் வேறு எப்படியும் விமர்சனம் செய்ய இயலாது.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் அதிகாலை நான்கு மணியளவில் வெள்ள நிவாரணம் பெறக் கூடினர் அப்பகுதி மக்கள். கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்ற பரிதவிப்பு தொற்றிக் கொள்ள, நுழைவு வாயிலின் கதவை உடைத்துக் கொண்டு, வெள்ளமென நுழைந்த மக்கள் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகி, சிட்டம்மாள்(71), சுப்பம்மாள்(54), குஞ்சரம்மாள்(70), ஜெய்லானி (22), கஸ்தூரி(60) என ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 ரேசன் கடைகளில் டோக்கன் பெற்ற 25 பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் ஒரே கவுண்டரில் நிவாரணம் வழங்க தீர்மானித்ததும் திட்டமிட்டதும் நிர்வாக எந்திரத்தின் பொறுப்பற்ற செயல். நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். நடந்து முடிந்த கொடுமைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாத அரசு, வதந்தியால் வந்த வினை என மக்களின் கோபத்தை திசை திருப்பி அலட்சியம் செய்தது.
அடுத்த பெருமழையில் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு நிவாரணம் தரப்போவதாக அரசு அறிவித்தது. சென்னை எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகில் அமைந்திருக்கும் மாநகராட்சி அறிஞர் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 8,566 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் பெற டோக்கனும், நிவாரண உதவியும் வழங்க முடிவெடுத்த 2,989 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதி உள்ள 5,577 குடும்பத்தினருக்குக் கடந்த டிசம்பர் 18 அன்று நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் ஒரு கறுப்பு ஞாயிறு படுகொலைகளுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நகர் சந்தைக்கும் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியின் நுழைவு வாயிலைக் கொண்ட சுற்றுச் சுவருக்கும் இடைப்பட்ட சுமார் 8அடி அகலமுள்ள குறுகிய பாதையில் அந்தக் கறுப்பு ஞாயிறின் அதிகாலை மூன்று மணிக்கு வெள்ள நிவாரணம் பெற, முன்வரிசையில் இடம் பிடிக்க, மக்கள் கூடத் தொடங்கினர். பயங்கரமான படிப்பினை ஒன்று நிகழ்ந்திருந்தும் கூட, அண்ணா, எம்.ஜி.ஆர். வழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவின் திராவிட இயக்க அரசுக்கு மக்களின் நலன் குறித்த அக்கரை மேலோங்கவில்லை. பத்துகளில், நூறுகளில் கூடத் தொடங்கிய மக்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்ய வேண்டிய காவல்துறை இரத்த சாட்சியங்களுக்கு நான்கு கடைநிலை காவலர்களை மட்டுமே வேடிக்கை பார்க்க நிறுத்தியிருந்தது. ஒழுங்கமைக்கப் பட்ட மக்கள்திரள், போராட்டங் களுக்கு வீதிக்கு வரும் வேளையில், உட்புகுந்து, மிருகவெறி கொண்டு தாக்கி சிதறடிக்கும் காவல்துறைக்கு ஒழுங்கு என்பதன் பொருள் வேறானதாகத் தான் இருக்க முடியும்.
இறுதியில் அது நடந்தே முடிந்தது. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம் முண்டியடித்து, பள்ளிக் கூட நுழைவு வாயிலின் கதவுகள் திறக்கப்பட்டோ அல்லது உடைக்கப்பட்டோ உள் நுழைந்த மக்கள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழ, மூச்சுத் திணறி படுகொலையானவர்களின் எண்ணிக்கை விடியற்காலையில் 42 ஆக இருந்தது. வழக்கம் போல இறந்து போனவர்களுக்கு மன்னிக்கவும் கொல்லப்பட்டோர்களுக்குக் கருணைத் தொகையாக அம்மாவின் பொற்கரங்கள் ஒரு இலட்சம் ரூபாயும் அழுது அரற்றியவர்களுக்கு ஆறத் தழுவலும் செய்து சரி செய்ய முயற்சித்தன. எம்.ஜி.ஆர். நகரில் அன்று இரவு முழுவதும் வீதி தோறும் பிணங்களைச் சுற்றிக் குழுமிய உறவுகளின் அழுகுரலும், அசம்பாவிதம் எதுவும் நிகழா வண்ணம் அவ்வப்போது காக்கிகளின் அணிவகுப்பும் ஒருசேர கோபமூட்டின. ஆனால் பொதுச்சமூகம் பிரக்ஞையற்று அமைதி காத்தது.
2000 ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, 1லிட்டர் மன்ணெண்ணெய், வேட்டி, சேலை என ஒரு சாமான்ய குடும்பத்தின் அரைமாத வாழ்க்கைக்கு போதுமான இந்த நிவாரணத்திற்காக அலை மோதிய மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம் கருணையோடும் அதிகம் கேலிகளோடும் நையாண்டியாய் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது, எவ்விதத்திலும் பாதிக்கப்படாத மேட்டுக்குடி வர்க்கம். ‘இலவசம்’ என்ற சொல்லின் சுயமரியாதையற்ற பொருளைக் கடந்து நாற்பது ஆண்டுகளாக, தமிழக மக்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் திணித்து, மந்தைக் கலாச்சாரத்தை உருவாக்கிய பெருமிதத்தோடும், திமிரோடும் கொக்கரிக்கிறது சுயமரியாதை இயக்க வழிவந்த திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சி. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், அது வாங்கினால் இது இலவசம், 50 சதவீத தள்ளுபடி என்ற பொய்யான பிரச்சாரங்களோடு மூர்க்கத்தனமாக ஒரு வணிக சமூகம் இங்கு ‘உழைப்பால்’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. மந்தைக் கூட்டமென மக்களை நசுக்கிப் பிழிந்து, ஏய்த்து வளரும் வணிகக் கூடாரத்தின் உயர்ந்த பட்ச வடிவமே இந்த சுரண்டுகிற ஊழல் அரசு. திராவிட இயக்கப் பணிகளின் பயனாளிகளாக கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரவர் காலத்திற்கான கடமைகள் செவ்வனே செய்யப்பட்டு வருவதை மக்கள் அறிந்து கொள்ளத்தான் அவகாசமில்லை.
தனியார் மயம், தாரளமயம், உலகமயமாக்கல் சூழலில் எலிக்கறி தின்ன வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் காத்திருக்கிறது. வேலையின்மை, வறுமை, அன்றாட வாழ்வின் போதாமை நெட்டித்தள்ள நிவாரணங்களுக்கும் இலவசங்களுக்கும் முண்டியடிக்கும் மக்கள் கூட்டத்தை மந்தையென உருவாக்கி வரும் ஒரு அதிகார வர்க்கம், கடந்த காலங்களில் நிகழ்ந்து போன அத்தனை துயரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. பொறுப்பை உணராத அரசுகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு, ஆணவத் தலைகளுக்குப் பொறுப்பை காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல.
உணர்த்த வேண்டிய கடமை மக்களைச் சார்ந்தது என சில மேதாவிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடும். இந்தப் பிரச்சார தறுதலைகளுக்குப் பின் செல்லும் அபாயமுள்ள மக்கள் கூட்டத்திற்கு தன் பொறுப்பை, தார்மீக கடமையை, சுயமரியாதை தலைதூக்கும் போர்க்குணத்தை உணர்த்த வேண்டிய அவசியமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாமென்பது நம் ஒவ்வொருவரும் தான்.
நடந்து முடிந்த கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானம் இயற்றியது. வியாசர்பாடி சம்பவத்திற்கு சொல்லப்பட்ட உப்புப்பெறாத ‘வதந்தி’ என்ற அதே காரணத்தையே பிரச்சாரம் செய்கிற அ.தி.மு.க. அரசு, தி.மு.க. பகுதி செயலாளரைக் கைது செய்து பழி தீர்த்தது. மக்களின் திசை திருப்பியது. எதிர்க் கட்சிகளின் தூசு தட்டிப் போன விசாரணைக் கமிசன் கோரிக்கையை நிறைவேற்றியது. ஒப்புக்கு ஒருசில அதிகாரிகளை இடம் மாற்றியது. தற்காலிக வேலை நீக்கம் போன்ற குறைந்தபட்ச தண்டனைகள் கூட அரசு எந்திரத்தின் எந்த மட்டத்திற்கும் வழங்கப்படவில்லை. போலீஸ் உடை தரிக்காத முதல் தர போலீஸ் அதிகாரியாக மக்களை காவல்துறை லத்திகளின் கீழ் அடக்கி ஆளும் ஜெயலலிதாவுக்கு காவல்துறையை மக்களை ஒடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்த முடியும். காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கடமை ஜனநாயக உணர்வுள்ள அறிவுஜீவிகள் முன் நிற்கிறது. தண்டனைக்குப் பிறகாவது சாட்சி சொல்ல வரவேண்டிய நியாயம் உணர்வோம். ஏனெனில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதி சொல்லும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்கள்.
புதியகாற்று - ஜனவரி 2006
முத்துராமலிங்கத் தேவர் விழா: அரசு நடத்துவதை எதிர்த்து வழக்கு
சென்னை,அக்। 24: முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவை அரசு விழா வாகக் கொண்டாடக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது। சென்னையைச் சேர்ந்த ஏ।சிம்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதா வது: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழா அரசு விழா வாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது।
தென் மாவட்டங்களில் இதனால் பல்வேறு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படும்। இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அக்டோபர் 26 முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. 3 நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த அறிவிப்பு, ஒரு குறிப் பிட்ட சாதியை மறைமுகமாக அரசு ஆதரிப்பதாக உள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களை அவம திப்பது போலவும் உள்ளது। ஒரு சாதியை மட்டும் அரசு ஆத ரிக்கக் கூடாது. எனவே அக் டோபர் 28 முதல் 30-ம் தேதி அரசு விழா நடத்துவது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். சாதித் தலைவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு அரசு விடு முறை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் இந்த வழக்கை புதன் கிழமை விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார்.
இந்த விழாவின்போது சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதித்தான் கமுதி தாலுகாவில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ராஜா கலி புல்லா கூறினார்.இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி திராவிட விழிப்புணர்ச்சி கழ கத்தின் நிறுவன தலைவர் பி.டி.குமார் மனு தாக்கல் செய் தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிம் சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
நன்றி: தினமணி
- இளம்பரிதி
ஏவாளுக்கும்
அவள் பொருட்டு ஆதமுக்கும்
சாத்தானை அறிமுகப்படுத்தினார்
சர்ப்பத்தின் உருவில்
தேவன் -
?ன் வடிவக் குறியீடே
சர்ப்பத்தின் உருவென
மறை நூற்களில் ஆதாரமில்லை
சாத்தான்கள் ஓதுவதில்லை
வேதங்களை ஒருபோதும்;
யாவற்றையும் வினவுயென
கி.மு. கிரேக்கத்தில்
முன் னெழுந்த சந்தேகத்திற்கும்
யாதொன்றையும் சந்தேகியென
கி.பி.லத்தீன் அமெரிக்காவில்
கிளர்ந்த கூற்றுக்கும்
நடுவில்
மத்திய கிழக்கு மலைமுகட்டில்
பதுங்கி வளர்ந்தது சர்ப்பம் -
சர்ப்பம்? சாத்தான்
எதிர் -
கடவுள் அதிகாரம் அமைதி
* * * *
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
இஸ்ராயிலிலிருந்து
நெருப் பாயுதங்கள் பொழிவதை
பரம பிதாவின் குமாரர்கள்
இடை நிறுத்தப் போவதில்லை
பாலத்தீனிய மணற் படுகைகளில்
முக்காலமும் சர்ப்பம் ஊர்ந்த
அடையாளச் சுவடுகள்
அழியு மட்டும் -
தேவகுமாரன்
சிலுவையில் அறையுண்டு
உயிர்த் தெழுந்த
மூன்றாம் நாளிலிருந்து
பல்கிப் பெருகின சர்ப்பங்கள்
பாலை நிலவெளி
நெடி துயர்மலை மடிப்பு
முந்நீர் ஆழிப் பேரலை
யாவிலும் உறைந்த படிமங்கள்
சர்ப்பங்களின் சலன இருப்பாய்;
யாவருக்கும் முன் செல்லும்
கடவுளின் சமூகம்
மௌனமாய் உணரும்
சர்ப்பங்களின் உயிர்த்திருப்பை
SURVIVAL.
அணுப் பிளவு ஆய்வகங்கள்
ஆயுதத் தொழிற் கூடங்கள்
பரபரப்பில் இயங்க
சர்ப்பங்களைப் பூண்டற் றழிக்கும்
சதியா லோசனைகளில்
ஆதமின் வம்சவழிகள்
வெளுத்த முகங்களுடன் -
பஞ்சபூதங்கள் உடனிருக்க
சர்ப்பங்களின் ஆலிங்கனம்
அழிவில்லாப் பெருநிகழ்வென
ஐ வகை நிலங்களிலும்
வானப் பெரு வெளியிலும்
யவ்வனப் புனரியிலும்
கணந்தோறும் நிகழ நிகழ
. . .
சர்ப்பங்கள் நிரந்தரமானவை
நாகசாகி பலுசிஸ்தான் காபூல்
திக்ரித் காசாமலைக் குன்றுகள்
நைரோபி ருவாண்டா கெய்ரோ
பெய்ரூட் குவாதமாலா ஹனாய்
புரூண்டி ஹராரே ஜொகன்னஸ்பர்க்
சால்சால்வடார் ஜகார்த்தா மணிலா
இன்னும் இன்னுமென
சர்ப்பங்கள் தலைநிமிரும்
நிலங்கள் . . .
பரிசுத்த ஆவியின் ஆலயங்களில்
தேவகுமாரனின்
குருதியூற்றி தாகம் தணிகிறார்கள்
மதகுருமார்கள்;
சர்ப்பத்தின் நாவில் வடித்தெடுத்து
சாக்ரட்டீசுக்குப் பருகத் தந்த
ஏதன்சின்
அழகிய நஞ்சுக் கோப்பையிலேயே -
சர்ப்பத்தின் பற்களில் வார்க்கப்பட்ட
பூர்வகுடிகளைக் கொன்றழிக்கும்
இரசாயன ரவைகள் இட்ட
இயந்திரத் துப்பாக்கிகளுடனும்
குருதி நிரப்பும் குடுவைகளோடும்
பனிமலை பாலை கடல் எல்லை
நீதிமன்ற வாயில் நகரவீதி
அடர்காடுகள் அகதிமுகாம்கள்
எங்கெங்கினும்
நிகழும் தேடுதல் வேட்டை -
ஆயினும்
சர்ப்பங்கள் அழிவில்லாதவை
கடவுள்
உயிர்த்திருக்கு மட்டும் மரணமில்லை
சாத்தானுக்கும்.
புதியகாற்று - டிசம்பர் 2006
பார்ப்பன-சத்திரிய-வைசிய-சூத்திர வருண அநீதிப் படிநிலையில் தீண்டத்தகாதோர் என விலக்கிவைக்கப்பட்ட பஞ்சமர் எனக் குறிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒருங்கிணைக்கும் வலைத்தள சமூகப்புலம் இது।
இந்தியத் துணைக்கண்டத்தின் ஆதிக்குடிகளாக இனவரைவியல் நியதிப்படி இம்மண்ணின் முற்றுரிமை பெற்ற பூர்வகுடி மக்களாம் ஒடுக்கப்பட்ட மற்றும் மலையின மக்களின் வாழ்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தகவமைவு உள்ளிட்ட வரலாற்று வெளியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய அவசியமானதொரு கால கட்டத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறோம்.
தொழில்முறை வேலைப்பிரிவினையாகப் பகுக்கப்பட்டிருந்த சமூக குழுக்களின் மீது படையெடுத்து வந்த ஆரிய மற்றும் இதர வந்தேறிகள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு ஏவிய வன்முறைகளாலும் பின்னிய சூழ்ச்சிகளாலும் ஆதிக் குடிமக்கள் தமக்குள் ஒன்றிணைய வாய்ப்பில்லாத நிரந்தர ஏற்றத்தாழ்வுகளை சுமந்து சாதிய சமூகங்களாக / குழுக்களாக இறுகிப்போயினர். வரலாற்றுக் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் அந்நிய படையெடுப்புகள் முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாதிக்க நவீன யுகம் வரை சாதி என்னும் படிமம் எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகாத வகையில் தொடர்ந்து சூழ்ச்சிகளால் பேணப்பட்டுவருகிறது. காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கேற்ப சாதி என்னும் படிமம் பார்ப்பன இந்துமத உளக்கிடக்கையின் ஆழ்மன சாரமாகவும் புறவய சமூக வெளியின் தார்மீக நியாயமாகவும் பலம் பெற்று வருகிறதேயொழிய, அதன் அடித்தளததை அசைக்க விழையும் அனைத்து மாற்று சிந்தனைகளையும் இதர ஆன்மீக செயலாக்கங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் தன்னகத்தே உள்வாங்கி அதற்கேயுரித்தான புதைகுழி போன்றதான நெகிழ்வுத் தன்மையோடு தன் அகோரப் பசியின் வாய் பிளந்து இம்மண்ணின் பெரும் சவக்குழியாய் இன்னும் காவு கேட்கிறது நம்மை.
சாதியைப் பாதுகாக்கும் மின்சார வேலியென மனித மனங்களை ஊடறுத்து பின்னப்பட்டிருக்கிறது ‘தீண்டாமை’ எனும் இழை. ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கும் வந்தேறி ஆக்கிரமித்த சாதி இந்துக்களுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களை மறைத்து, இம் மண்ணின் வரலாறென உருவகப்படுத்தப்படும் அனைத்துப் பொய்மைகளையும் தகர்க்கும் பொருட்டு, மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன் கலை-இலக்கிய-சிந்தனை தளத்தில் செயல்பட வேண்டிய முக்கியத்துவம் கருதி, ‘ஏகலைவா’ ஒடுக்கப்பட்டவர்களின் குரல் தன் பணியை துவங்குகிறது.
இந்தியத் துணைக்கண்ட சமூகத்தின் பாரம்பரிய பெருமிதங்களை புகழ்ந்துரைக்கப்படும் புராண இதிகாச பொய்மைகளிலிருந்து தொடங்கி இம் மண்ணின் பூர்வகுடி மக்களின் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்வதே ஆகப் பொருத்தமெனக் கருதியே பார்ப்பன துரோணனால் சதி செய்து பாரம்பரிய திறமையும் மரபுரிமையும் பறிக்கப்பட்டு வந்தேறிகளின் அதிகாரம் நிறுவப்பட்ட கருத்துருவாக்கத்தின் மீட்புக் குறியீடாகவே நம் ஆதிக்குடிமகன் ‘ஏகலைவனின்’ பெயர் தாங்கி வலம்வரத் துவங்குகிறது இவ்வலைத்தளம்.
பாரம்பரிய வில்வித்தையில் தேர்ந்த ஏகலைவனின் வீரத்தையும், திறமையையும் புகழையும் எதிர்கொள்ள அஞ்சி, சதி செய்து அவனது கட்டைவிரலை வெட்டி எறிந்த பார்ப்பன சத்ரிய ஓநாய் கூட்டம் என மறுவாசிப்பு செய்கிறது நம் சிந்தனை.
பூர்வகுடி மக்கள் சதி-சூது அறியாதவர்கள், பொய்மை-புரட்டு தெரியாதவர்கள், வன்மம்-வஞ்சகம் புரியாதவர்கள். ஆகவே எதிரிகள் வீழ்த்தினர். நம் மக்கள் உழைப்பும் உண்மையும் மட்டுமே அறிந்தவர்கள், நிராயுதபாணிகள். தமக்கான வாழ்வை, அரசியலை, வரலாற்றை மீட்டெடுக்கும் திசை வழிகளில் திணறி வருபவர்கள். அவர்களுக்காக எழுதுவோம், உரையாடுவோம், ஒருங்கிணைவோம். வீழ்த்தப்பட்ட சதிகள் அறிந்து, எதிரிகளின் வன்மம் புரிந்து நமக்கான கருத்தியலை ஆயுதமாக்குவோம். பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுப்போம், இழந்த அதிகாரத்தை முன்னெடுப்போம்.