Tuesday, May 22, 2007

அதிகாரம் 1: ஆதியாகமம்

- இளம்பரிதி
ஏவாளுக்கும்
அவள் பொருட்டு ஆதமுக்கும்
சாத்தானை அறிமுகப்படுத்தினார்
சர்ப்பத்தின் உருவில்
தேவன் -

?ன் வடிவக் குறியீடே
சர்ப்பத்தின் உருவென
மறை நூற்களில் ஆதாரமில்லை

சாத்தான்கள் ஓதுவதில்லை
வேதங்களை ஒருபோதும்;

யாவற்றையும் வினவுயென
கி.மு. கிரேக்கத்தில்
முன் னெழுந்த சந்தேகத்திற்கும்
யாதொன்றையும் சந்தேகியென
கி.பி.லத்தீன் அமெரிக்காவில்
கிளர்ந்த கூற்றுக்கும்
நடுவில்
மத்திய கிழக்கு மலைமுகட்டில்
பதுங்கி வளர்ந்தது சர்ப்பம் -

சர்ப்பம்? சாத்தான்
எதிர் -
கடவுள் அதிகாரம் அமைதி
* * * *
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
இஸ்ராயிலிலிருந்து
நெருப் பாயுதங்கள் பொழிவதை
பரம பிதாவின் குமாரர்கள்
இடை நிறுத்தப் போவதில்லை
பாலத்தீனிய மணற் படுகைகளில்
முக்காலமும் சர்ப்பம் ஊர்ந்த
அடையாளச் சுவடுகள்
அழியு மட்டும் -

தேவகுமாரன்
சிலுவையில் அறையுண்டு
உயிர்த் தெழுந்த
மூன்றாம் நாளிலிருந்து
பல்கிப் பெருகின சர்ப்பங்கள்

பாலை நிலவெளி
நெடி துயர்மலை மடிப்பு
முந்நீர் ஆழிப் பேரலை
யாவிலும் உறைந்த படிமங்கள்
சர்ப்பங்களின் சலன இருப்பாய்;
யாவருக்கும் முன் செல்லும்
கடவுளின் சமூகம்
மௌனமாய் உணரும்
சர்ப்பங்களின் உயிர்த்திருப்பை
SURVIVAL.

அணுப் பிளவு ஆய்வகங்கள்
ஆயுதத் தொழிற் கூடங்கள்
பரபரப்பில் இயங்க
சர்ப்பங்களைப் பூண்டற் றழிக்கும்
சதியா லோசனைகளில்
ஆதமின் வம்சவழிகள்
வெளுத்த முகங்களுடன் -

பஞ்சபூதங்கள் உடனிருக்க
சர்ப்பங்களின் ஆலிங்கனம்
அழிவில்லாப் பெருநிகழ்வென
ஐ வகை நிலங்களிலும்
வானப் பெரு வெளியிலும்
யவ்வனப் புனரியிலும்
கணந்தோறும் நிகழ நிகழ
. . .
சர்ப்பங்கள் நிரந்தரமானவை

நாகசாகி பலுசிஸ்தான் காபூல்
திக்ரித் காசாமலைக் குன்றுகள்
நைரோபி ருவாண்டா கெய்ரோ
பெய்ரூட் குவாதமாலா ஹனாய்
புரூண்டி ஹராரே ஜொகன்னஸ்பர்க்
சால்சால்வடார் ஜகார்த்தா மணிலா
இன்னும் இன்னுமென
சர்ப்பங்கள் தலைநிமிரும்
நிலங்கள் . . .

பரிசுத்த ஆவியின் ஆலயங்களில்
தேவகுமாரனின்
குருதியூற்றி தாகம் தணிகிறார்கள்
மதகுருமார்கள்;
சர்ப்பத்தின் நாவில் வடித்தெடுத்து
சாக்ரட்டீசுக்குப் பருகத் தந்த
ஏதன்சின்
அழகிய நஞ்சுக் கோப்பையிலேயே -

சர்ப்பத்தின் பற்களில் வார்க்கப்பட்ட
பூர்வகுடிகளைக் கொன்றழிக்கும்
இரசாயன ரவைகள் இட்ட
இயந்திரத் துப்பாக்கிகளுடனும்
குருதி நிரப்பும் குடுவைகளோடும்
பனிமலை பாலை கடல் எல்லை
நீதிமன்ற வாயில் நகரவீதி
அடர்காடுகள் அகதிமுகாம்கள்
எங்கெங்கினும்
நிகழும் தேடுதல் வேட்டை -

ஆயினும்
சர்ப்பங்கள் அழிவில்லாதவை
கடவுள்
உயிர்த்திருக்கு மட்டும் மரணமில்லை
சாத்தானுக்கும்.

புதியகாற்று - டிசம்பர் 2006