Tuesday, September 22, 2009

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 2

பகுதி - 2

மலாயா தீபகற்பத்தில் குடியேறிய இந்திய வம்சாவளியினரின் குடியேற்றப் பின்புலத்தில் மறைக்கப்பட முடியாத வரலாற்றுச் சுவடுகளாக, வறுமைக் கொடுமைகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் சம விகிதத்தில் பதிந்துள்ளன என்பதே, இக்கட்டுரையின் இதுவரையான செய்திகளின் சாரமாகும். மலாய பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஆர். ராமசாமி, "இந்தியத் தமிழர்களின் மலாயக் குடியேற்றத்தில் சாதியின் பங்கு' என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி உள்ளார். இலங்கையில் ஈழ மக்களின் விடுதலைக் கான ஆயுதப் போராட்டம் தலை தூக்காத கால கட்டத்தில், அம்மண்ணில் நிலவிய சாதிக் கொடுமைகளையும், அதை எதிர்த்து நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களைப் பற்றியும் – இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் எவரும் மறுக்க முடியாது. Dalit lady in Malaysia

இன்றைக்கும் கூட, ஈழத் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் சாதி, சமய, சடங்குகளைக் கைவிடாத நிலையிலேயே இருப்பதாகப் பல ஆதாரப்பூர்வ செய்திகள் உள்ளன. ஈழ சமூக வாழ்க்கையிலும் சரி, விடுதலைப் போராட்ட அரசியலிலும் சரி, யாழ்ப்பாண வெள்ளாள சாதியினரின் தலைமைத்துவம் – அதிகாரத்துவம் – ஒடுக்குமுறை ஆகியன பற்றி நேர்மையாக உரையாடல் நிகழ்த்தும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது. ஆனாலும் இந்தியõவைப் போல, தமிழ் நாட்டைப் போல "எங்கட நாட்டில் சாதிப் பிரச்சனை இல்லை' என்பதாகவே இலங்கைத் தமிழர்கள் பலரும் கதைத்து வருகின்றனர்."இலங்கையைப் போலவே, மலாயாவிலும் தமிழர்கள் இன ஒற்றுமையோடுதான் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பாகுபாடெல்லாம் எங்கள் நாட்டில் இல்லை' என்பதாகக் கூறும், மலாய இந்திய வம்சாவளியினர் அதாவது, இந்து தமிழர்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.

1920களில் பிழைப்புக்காக பெருமளவில் குடியேறத் தொடங்கிய அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1980களில் மலாயாவில் சாதிச் சங்கங்கள் முளைவிடத் தொடங்கின. தமிழகத்தைப் போலவே, மலாயாவிலும் "மலேசிய முக்குலத்தோர் பேரவை', "மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம்', "மலேசிய யாதவர் சங்கம்' என ஆதிக்க சாதி சங்கங்கள் கட்டப்பட்டன. ஆகஸ்ட் 11 மற்றும் 12, 2007 ஆகிய நாட்களில் பினாங்கு நகரில், மலேசிய முக்குலத்தோர் பேரவையின் "பத்தாவது தேசியப் பேராளர் மாநாடு' முன்னாள் இந்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் சிறப்பாளராகக் கலந்து கொள்ள நடைபெற்று முடிந்தது. திருநாவுக்கரசர் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். இது போன்ற ஒரு மாநாட்டில் இதற்கு முன்னர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் கெடா மாநில முக்குலத்தோர் சங்கம் "முத்துராமலிங்கத் (தேவர்) தின் 95 ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்பு மலர்' வெளியிட்டு, சாதிப் பெருமைகளைக் கொண்டாடியது.

"மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் புதிய செயலவை தேர்வு' ("மக்கள் ஓசை' 27.4.2007), "சிலாங்கூர் முத்துராஜா வழியினர் சேவை அலுவலகம்' திறக்கப்பட்டது, "உலுதிராமில் மருதுபாண்டியர்கள் குருபூஜை' ("மலேசிய நண்பன்' 27.10.2007), "வன்னியர் கூட்டுறவு கழகத்திற்கு பங்குப் பணம் வழங்குதல்' ("மலேசிய நண்பன்' 15.8.2007), "மலேசிய சம்புகுல சத்திரியர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுக் கூட்டம்' ("தமிழ் நேசன்', 23.9.2006), "உலுதிராம் சிறீகருமாரி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் விழா' "போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!' ("மலேசிய நண்பன்' 31.10.2007) என செய்தித் தாள்களும் சாதி வளர்க்கத் துணை புரிந்து வருகின்றன.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியன உத்தரவாதம் செய்யப்பட்டு விட்டால், அவனுக்கு வாழ்வின் அடுத்த நிலையாக லவுகீகங்கள் தேவைப்படுகின்றன. அவ்வகையில் ஒரு சராசரி தமிழனின் லவுகீக வாழ்வு – கோயில் வழிபாடு, திருவிழா, களியாட்டம், தமிழ் சினிமா ஆகியவற்றிலேயே லயித்துக் கிடக்கிறது எனச் சொன்னால், எளிமைப்படுத்துவதாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நவீன கால தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் குறித்து நாம் சற்றே சிந்திக்க முற்பட்டால், இவ்வகையான எளிமைப்படுத்துதலைக் கடந்து சமூகம் எங்கே வளர்ந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக – "இந்து தமிழர்'களாகவும் "சாதித் தமிழர்'களாகவும்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கிற தமிழர்களின் பெருமை இருக்கிறது. பெருந் தெய்வக் கோயில்களும் அவற்றில் பூசனை செய்ய குருக்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களும், வீதிதோறும் சிறு தெய்வக் கோயில்களும் அவற்றில் ஆண்டுதோறும் கொண்டாட்டங்களும் இல்லாமல் – இன்றைய உலகியல் தமிழன் எங்கும் இல்லை.

மலாயாவில் நாகரிகப் பெண்கள் அணியும் மேலாடையில் அனுமன் உள்ளிட்ட சில உருவப்படங்களை (வர்த்தக நோக்கிலும் ஆன்மீகம்) அச்சிட்டு துணிக்கடைகளில் விற்பனை செய்து வந்தனர். இந்து மத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டதாக, பல திசைகளிலிருந்தும் கொதித்து எழுந்து விட்டனர் தமிழர்கள். "சமயத்தை மதிக்காத வியாபாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்' என "பினாங்கு பயனீட்டாளர் சங்க' கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ்

("மக்கள் ஓசை' 12.7.2007) எச்சரிக்கை விடுத்தார். "இந்துக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அரசாங்கம் தலையிட வேண்டும்' என மகரம் எண்டர்பிரைசஸ் டத்தோ மு. வரதராஜு ("மக்கள் ஓசை' 10.7.2007) வேண்டுகோள் விடுத்தார். "தெய்வத் திருவுருவப் படங்களோடு திருவிளையாடல்கள் வேண்டாம்' என டத்தோ சுப்ரமணியம் கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைத்தார்.

மலேசியாவின் சுதந்திரப் பொன் விழா 50ஆவது ஆண்டை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் சிறப்பு பூஜைகளும் ("தமிழ்நேசன்' 6.9.07), பத்துமலை வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகமும் ("மக்கள் முரசு' 23.9.07), "சிப்பாய் சுங்கை பீலேக்'அதிசய விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 9.9.06), சிறீ பத்திர காளியம்மன் ஆலய 27ஆவது வருடாபிஷேகத் திருவிழாவும் ("மலேசிய நண்பன்' 6.9.07), கோலாலம்பூர் சிறீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் சிறீ நாகேஸ்வரி அம்மன் ஆலய ஏற்பாட்டில் டத்தின் சிறீ இந்திராணி சாமிவேலு தலைமையில் இரண்டாயிரம் பெண்கள் ஆன்மீக பால்குட ஊர்வலமும் ("த ஸ்டார்' 30.7.07), சிறீ சுருதி மகளிர் நலமன்ற தேசியத் தலைவரும் புனித நடை ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தின் சிறீ இந்திராணி தொடங்கி வைக்க, சுமார் அய்நூறு பேர் கலந்து கொள்ளும் ஆன்மீகப் பயணமும் ("தமிழ் நேசன்' 29.3.07), ஈப்போ குங்குமாங்கி மகா காளியம்மன் ஆலயத்திற்கு சுமார் பன்னிரண்டு லட்சம் வெள்ளி செலவில் கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 7.7.06), ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் தேர்தலில் வெற்றிபெற கூச்சால் சிறீ மகா பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையும், இவ்வாலயத்தில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசை பூர்த்தியுடன் 108 சங்காபிஷேகமும் ("தமிழ் குரல்' 19.3.06) என தமிழகத்தைப் போலவே, மலேசிய மாநிலங்களிலும் தமிழர்களின் ஆன்மீகக் கொண் டாட்டங்கள் சளைத்தவையல்ல.

இந்து சமயத்தின் தொங்கு சதைகளாக வளர்ந்து வரும் யோகா – தியான மய்யங்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் மலேசியாவிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த உலகின் ஒரு பகுதியல்ல. இந்த உலகம் என்னுடைய ஒரு பகுதியாகும்' என்ற உளறல் பேச்சுக்கெல்லாம் ஆன்மீக மடங்கள் உருவாகிவிட்டன. இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக, "இந்து சமயத்தை இழித்துப் பேசுவதா?' என மகா மாரியம்மன் தேவஸ்தானம் கண்டனம் தெரிவிக்

கிறது. இவருக்கு எதிராக 123 பேர் போலிசில் புகார் தெரிவித்தனர். "போலிஸ் விசாரணை வரை அனைவரும் பொறுமை காப்பீர்' என இந்து சங்கம் கோரிக்கை (12.3.07 "மக்கள் ஓசை') வைக்கிறது. ஆனால் தாய்த் தமிழ் நாடோ, இம்மூடநம்பிக்கை முரண்பாடுகளையெல்லாம் களைந்து இன்னும் முன்னேறிவிட்டது. இங்கே நடமாடும் கடவுள்கள் பலர், அங்கே இப்போதுதான் முளைவிடத் தொடங்கியுள்ளனர். நட்பு முறையில் இம்முரண்பாடுகளை இந்து மதம் (சங்கம்) தீர்த்து வைக்கும். ஏனெனில், மூடத்தனங்களே இந்து மதத்தின் மூலதனம் என்பது அறிவியல் சான்று.

"ஆலயங்களில் பூஜைகள் மட்டுமன்றி, சமயக் கருத்தரங்கம், பாலர் கல்வி, நன்னெறிச் சொற்பொழிவு ஆகியவற்றை நடத்தி மக்களுக்கு சமயத் தெளிவு ஏற்படுத்தினால், இது போன்றவர்களிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்து சமயத்தை சிறுமைப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று சிறீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஆலய மண்டபத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் "இந்து சமயத்தைப் பற்றி ஓர் இந்துவே பழிப்பதை சில இந்துக்கள் கேட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது வேதனைக்குரியது' என்றார் தொழிலதிபர் டத்தோ முனியாண்டி என்பவர் ("மலேசிய நண்பன்' 16.3.07). மேற்குறிப்பிட்ட கருத்தாளர்களின் வார்த்தைகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவில் மத வெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்பரிவார அமைப்புகளின் கருத்தைப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன. இந்துமத உணர்வை அரசியல் நடவடிக்கைகளாக மாற்ற, இதுபோன்ற சமய சந்தர்ப்பப் பேச்சுக்கள்தான் அவர்களுக்கு உதவுகின்றன. இவர்களைப் போன்றவர்களிடையிலிருந்து தான் "இந்து நடவடிக்கைகள் குழு' போன்றவை உதித்திருக்கும் என சந்தேகிக்க இடமுண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களிடத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களிடத்திலும் மதரீதியான பிளவை ஏற்படுத்தி, இந்து உணர்வின் மேல் பார்ப்பனிய – சாதிய மேலாண்மையை நிறுவ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் உறுப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Malaysia's tamils

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு சரா சரித் தமிழனின் லவுகீக வாழ்க்கை – கோயில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் ஆகியவற்றைப் போலவே பொதிந்திருக்கும் இன்னொரு அம்சம் தமிழ்த் திரைப்படங்கள். வளர்ச்சி பெற்றிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களோடு, திரைப்படத்திற்கு இருக்கும் முதன்மையான தொடர்பு, உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரே நாளில் திரைப்படங்களை வெளியிடும் அளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு வெளியாகி மிகுந்த லாபம் ஈட்டிய ஒரு திரைப்படமாக, ரஜினி நடித்த "சிவாஜி' படத்தை எடுத்துக் கொள்வோம். "குறித்த நேரத்தில் இப்படம் காட்டப்படவில்லை என்பதற்காக திரையரங்க உடைப்பு, எரிப்பு, நச்சு மாவு வீச்சு, அடிதடி முதலானவையும் நடந்துள்ளன' என ("மக்கள் ஓசை' 20.6.2007) திருமாவளவன் என்பவர் எழுதுகிறார். மலாயாவை விடுங்கள். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் எரிந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் இப்படத் தைக் காண, பத்து நாட்களுக்குப் பின்னரும் திரையரங்க வாயில்களில் நீண்ட வரிசையில் தமிழர்கள் காத்துக் கிடந்தனர் என்ற செய்தி, தமிழர்களின் மன உணர்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இல்லையா? "வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் மன இயல்பினராக, தமிழர்கள் வாழ்வதே இதற்குக் காரணம்' என்கிறார் திருமாவளவன்.

ஆனால் "சிவாஜி' திரைப்படத்திற்கு வரவேற்பும் கொண்டாட்டமும் இப்படி இருக்க, தமிழக அரசு தயாரித்த "பெரியார்' திரைப்படமோ மலேசியாவில் படாதபாடுபட்டு விட்டது. திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலிருந்தே "பெரியார்' படத்திற்கு எழுந்த கண்டனங்களும் எதிர்ப்பும் தமிழர்களைப் புரிந்து கொள்ளப் போதுமானவையாயிருந்தன. "இந்துக்கள் மனம் புண்படும்படி பாடல் எழுத வேண்டாம்' என வைரமுத்துவிடம் இந்து அமைப்பினர் வேண்டுகோள் ("மலேசிய நண்பன்' 3.4.07) விடுத்தனர்.

""தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம்ஆண்டு மலாயாவிற்கு வந்த போது, "அவர் இந்நாட்டிற்குள் நுழையக் கூடாது' என்று இந்து மத அமைப்பினர் தீர்மானம் போட்டு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். அந்த எதிர்ப்பை உடைத்தெறிந்து தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் உறையாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்பினார். மலேசியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும் கூட பெரியாரை அவர்தம் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொள்ளாமல், ஒரு மரியாதைக்காக அவர் மீது மதிப்பு வைக்கின்றனர். பெரியார் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததும், பகுத்தறிவு உணர்வை வளர்த்துக் கொள்ளாததுமே, தமிழர்களின் குழப்பமான சிந்தனைக்கு வழிகோலுகின்றன.

மலேசிய இந்திய காங்கிரஸ் இன்றைக்கு பலவாகப் பிளவுபட்டிருப்பது சாதிப் பிரச்சனைகளை முன்வைத்துதான். "ம.இ.கா. தேர்தலைச் சந்தித்த போதெல்லாம் சாதி அரசியல் நடத்துபவர் டத்தோ சிறீ சாமிவேலுதான்' என பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ம.இ.கா.விலிருந்து பிரிந்து அய்.பி.எப். என தனிக்கட்சி தொடங்கிய டத்தோ எம்.ஜி. பண்டிதனின் ("மக்கள் ஓசை' 2.2.06) அறிக்கை கூறுகிறது. ம.இ.கா.விலிருந்து நீக்கப்பட்ட அம்பாங் முனியாண்டி என்பவரும், "ம.இ.கா.வில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருபவர்கள் சாமிவேலுவின் உறவுக்காரர்கள்தான். ம.இ.கா.வில் ஒரு ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே பட்டம், பதவி' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

"சாதிப் பித்து பிடித்தவர்களுக்கு ம.இ.கா.வில் இனி இடமில்லை' என சாமிவேலு ("தமிழ் குரல்' 28.1.06) இவர்களுக்கு பதில் சொல்லியிருந்தாலும், ம.இ.கா.வின் பிளவுகளுக்கும், இறுதியாக நடைபெற்ற மலேசிய தேர்தலில் ம.இ.கா. குறிப்பாக, சாமிவேலு பெற்ற தோல்விக்கும் முதன்மைக் காரணம், இவர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதி உணர்வுதான் என்பதை ஆராயத் தேவையில்லை.

தமிழர்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளில் இந்து மத மூட நம்பிக்கைகள் மேலாதிக்கம் செலுத்துவதால்தான், தமிழர்கள் இன்றைக்கு சாதி சங்கங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இத்தகைய சாதி சங்கங்களை வளர்த்துக் கொண்டே தான், மறுபுறம் இந்துத்துவ ஒருமைப்பாடு பற்றியும் இந்து சங்கங்கள் போதித்து வருகின்றன. ஒரு தமிழனோ, இந்தியனோ சாதியாகப் பிளவுபடாமல் இந்துவாக மட்டும் இங்கு இருக்கலாகாது. நாளுக்கு நாள் சாதி சங்கங்கள் பலம் பெற்று வருவதால்தான், மலேசியாவில் இன்று கல்விக் கூடங்களில் கூட சாதி சங்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற போர்வையில் நுழையும் அவலம் நேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், பண்பாட்டு நிகழ்வுகள் என சாதி சங்கங்கள் தங்களது சங்கங்களின் முகவரியிலேயே மாணவர்களுக்கு "சான்றிதழ்கள்' வழங்குவதும், பரிசுப் பொருட்கள் தருவதும் இன்றைய மலேசிய கல்விக் கூடங்களில் இயல்பாகி வருகின்றன.

""இன்று பள்ளிகளில் அரசியலோடு சாதியும் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒத்துப் போகாததற்கு, சாதிப் பிரச்சனையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் தாங்கள் படித்துக் கொடுக்கின்ற பிள்ளைகள் கீழ் சாதிக்காரர்கள் என்பதால், தன் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். சில பிள்ளைகளை ஏசும் பொழுது, சாதிப் பெயரை குறிப்பிட்டுக் கொள்வதில் சில ஆசிரியர்களுக்கு கரும்பு கடிக்கிற மாதிரி. இன்றோ பல பிள்ளைகள் படிப்பை சுமையாகவும் ஆசிரியரை எதிரியாகவுமே நினைக்கின்றனர்'' என ("செம்பருத்தி', சூன் 07) இதழில் எழுதுகிறார் கா. கலைமணி.

புதிய தலைமுறை மாணவர்களிடம் கல்வி பயிலும் பிஞ்சுப் பருவத்திலேயே சாதி உணர்வை, நஞ்சாய் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளன மலேசியாவின் சாதி சங்கங்கள். அடுத்த தலைமுறையில் மலேசியத் தமிழர்களிடையே சாதிச் சண்டைகள் பெருமளவில் நடக்க இப்போதே விதை தூவப்பட்டு வருகின்றன.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை என அங்கலாய்ப்பதில் எவ்விதப் பயனுமில்லை.பெரியார் சொல்வது போல, இந்து மதம் ஒழியாத வரை சாதியம் ஒழியப் போவதில்லை. "மதம் ஒரு அபின்' என்று கார்ல் மார்க்ஸ் விமர்சித்தது, சாமானிய மனிதனுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சாதியின் பெயரால் பிளவுக்கும், சண்டை சச்சரவுக்கும், இந்திய / தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கும், வீழ்ச்சிக்கும் வழிகோலுவது இந்து மதம் அன்றி வேறொன்றுமில்லை! சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு தேரோட்டம் என தமிழ்ச் சமூகத்தில் உட்பூசல்கள் பெருகி வளர, சாதி சங்கங்களை அரவணைத்து அழியாது காப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான்,உலகம் முழுவதும் இந்து மத சங்கங்களும் இயக்கங்களும். இதைப் புரிந்து கொள்ளாதவரை, உலகின் எந்த மூலையில் வாழும் தமிழர்களும் இன – பண்பாட்டு – மொழி அடிப்படையில் ஓர்மை கொள்வது கடினமே.

(அடுத்த இதழிலும்)

- கா.இளம்பரிதி

Thursday, September 17, 2009

வீரவணக்கம்

Friday, September 11, 2009

போராளிகள் மாதம்



Monday, August 31, 2009

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி - 1

ழத்தமிழர், இலங்கைத் தமிழர், அயலகத் தமிழர், புகலிடத் தமிழர், தாயகத் தமிழர் என எடுத்தாளப்படும் எந்தவொரு சொற்பிரயோகமும் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. கோடிக்கணக்கான மனிதர்களை அல்லது லட்சக்கணக்கான மக்கள் தொகுதியை அடையாளப்படுத்தும் வலிமை இவ்வார்த்தைகளுக்கு இருப்பதால், அதே வன்மையோடு இச்சொற்களுக்குள் நாம் ஊடுறுவ விழைகிறோம். வன்மத்தோடு இச்சொற்களை உடைத்து நொறுக்க வேண்டுமென்பது எமது திட்டமோ, நோக்கமோ அல்ல. ஈழத் தமிழர்கள் குறித்தும், உலகத் தமிழினம் குறித்தும் அக்கறை சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், தமிழர்களின் வீழ்ச்சிக்கும், தமிழினத்தின் பின்னடைவுக்கும், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் குணங்களாகப் புரையோடிப் போயிருக்கும் துரோகமும், ஊழலுமே முக்கியக் காரணிகளெனப் பரவலான குற்றச்சாட்டு இப்போதும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் துரோகமும் ஊழலும் எளிதில் நிகழ்ந்து விடும் வாய்ப்புள்ள, பதப்படுத்தப்பட்ட நிலமாக, தமிழ் இனம் பலநூறு ஆண்டுகள் நிலைப் பெற்றிருப்பதற்கான அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது பார்ப்பனிய மநு தர்மம். இதுவே, வர்ணங்களை உருவாக்கி, சாதிகளைத் தோற்றுவித்து, இனக்குழுப் பகைமைகளை ஊட்டி வளர்த்து, நவீன காலம் தொடங்கும் போது இந்துத்துவ அரசியலாக வடிவம் பெற்றது. இந்தியா – இந்து – இந்திய ஒற்றுமை என செயற்கையாகக் கட்டியமைக்க முயல்வது போலவே, "நாம் தமிழர்' என பாவனை செய்வதும் கூட, தனி நபர்களின் பிழைப்புவாதத்திற்கே மீண்டும் மீண்டும் இட்டுச் செல்லும். "ஈழத் தமிழர் வரலாறு' என வெகுசனப் பத்திரிகைகள் வணிகம் செய்யும் அரசியல் வரலாற்றைத் தாண்டி, எந்தவொரு நாட்டில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் அல்லது ஒட்டுமொத்த தமிழினத்தின் சமூக வரலாறே, நமது மீளாய்விற்கும் திறனாய்விற்கும் அவசியமாகிறது.

தமிழரின் அரசியல் வரலாறும் சமூக வரலாறும் பெருமிதங்களை மட்டுமல்ல; அவலங்களையும் கழிவுகளையும் உள்ளடக்கியவைதாம். பெருமைகளில் மூழ்கித் திளைப்பவர்கள், தங்கள் கழிவுகள் தம் வீட்டு முற்றத்திலேயே நாறிக் கிடப்பதை உணர வேண்டும். நாம் குப்பையைக் கிளறுவதாக அங்கலாய்ப்பவர்கள், அதை எரித்துச் சாம்பலாக்க முன்வர வேண்டும். மநுதர்மத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தும் "சாதி இந்துக்கள்' அழுகிப்போன தம் சமூக வரலாற்றின் கழிவுகளைத் தூய்மைப்படுத்தும் செயல்திட்டங்களை முன் நிபந்தனைகளாகக் கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாகவே, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியத் தமிழர்கள் குறித்தான வாழ்வியல் சிக்கல்கள், அவர்களின் போராட்டங்கள் வழியே தமிழகத்தில் கவனப்படுத்தப்பட்ட நிலையில், செய்திகளின் மீதான உடனடி கவனம் என்பதைக் கடந்து சமூக ஆய்வுக் கண்ணோட்டம் என்ற அளவிலும், "தோட்டத் தொழிலாளர்கள்' என்ற வகையினத்துள் கூலி உயர்வுக்காகப் போராடிய போது, தாமிரபரணி ஆற்றில் அரசப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாஞ்சோலை மலையக மக்களின் நினைவை மீட்டெடுக்கும் நோக்கிலும் இக்கட்டுரை காலப்பொருத்தமாகவும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

மலேசியத் தமிழர்கள் மீது தாக்குதல்; இந்திய வம்சாவளியினர் மீது மலேசிய அரசாங்கத்தின் அடக்குமுறைகள்; மலேசியாவில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன... என்றெல்லாம் கடந்த 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று இந்திய – அய்ரோப்பிய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்துப் பேசுகின்ற அளவிற்கு செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. மலாய் தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவுக் குரல் தந்தனர். இப்பிரச்சினை குறித்த தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கைக்கு, மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், "இது எங்கள் உள்நாட்டுவிவகாரம். யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை' என பதிலடி தருமளவுக்கு பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது.

தமிழர்கள் மலேசியாவில் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தே, இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்துவதாக செய்திகள் அறிவிக்கின்றன. இதுபோல இன ரீதியிலான உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம்தான் இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்து, இரண்டு லட்சம் தமிழர்களை யுத்த சவக்குழியில் புதைத்தது. 10 லட்சம் ஈழ மக்களை உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறும் ஏதிலிகளாக புலம்பெயர வைத்தது. இலங்கையின் வரலாற்றை, துன்பியல் அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமிருப்பதால், இந்நேரத்தில் இøதப்பற்றி இங்கு குறிப்பிட நேர்கிறது. இந்திய வம்சாவளியினராக தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடியேறிவிட்ட மலேசியா மட்டுமல்ல, மாலத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இன்னும் சில நாடுகளில்கூட, இந்திய வம்சாவளியினரின் குடியுரிமைகள் குறித்த அக்கறையும் இந்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. ஆனாலும் இன அடிப்படையின் உணர்ச்சி வழி கூட்டு மன அரசியல் தொகுதியாய், திராவிட இயக்கத்தினரால் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கும் தாயக தமிழ்ச் சமூகத்தில் இந்திய வம்சாவளியினரின் வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து அணுகப்படும் வழமையான கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பார்வையில் இக் கட்டுரை எழுதப்படுகிறது.

மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவரும் மலேசிய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான டத்தோ சாமிவேலு, "எங்கள் நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றனர். இதில் அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள். 7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். மலாய், சீனர்கள், இந்தியர்கள் மலேசிய இந்தியன் காங்கிரசின் தலைவரும் மலேசிய அரசில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவருமான டத்தோ சாமிவேலு, "எங்கள் நாட்டில் மூன்று இனங்கள் இருக்கின்றனர். இதில் அறுபத்தாறு சதவிகிதத்தினர் மலாய்க்காரர்கள். இருபத்தாறு சதவிகிதத்தினர் சீனர்கள். 7.8 சதவிகிதத்தினர் இந்தியர்கள். இவர்களைத் தவிர பழங்குடியின மக்களும் இருக்கின்றனர். மலாய், சீனர்கள், இந்தியர்கள் என மூன்று இனங்களுக்குள்ளே செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, இந்தியர்களுக்கு முழு குடியுரிமை வழங்க முடிவானது' என்கிறார். ஏறத்தாழ 8 சதவிகித இந்திய வம்சாவளியினரில் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள் ஆகியோரும் மதம் என்ற வகைப்பாட்டில் 90 சதவிகிதத்தினர் இந்து மதத்திலும் ஏனையோர் கிறித்துவம், இஸ்லாம், பவுத்தம் போன்ற மதங்களிலும் உள்ளனர். ஆனாலும் இந்திய வம்சாவளியினரில் மத – இன பெரும்பான்மையினராக வாழும் இந்து தமிழர்களையே மலேசியத் தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என பெரிதும் குறிப்பிடும் சூழல் நிலவுகிறது. இக்கட்டுரையின் பேசு பொருளாக "இந்து தமிழர்'களையே நாமும் கவனப்படுத்த எண்ணுகிறோம். ஆக, மலேசிய மக்கள் தொகையில் இவர்கள் சற்றேறக்குறைய 7 சதவிகிதத்தினர் எனக் கொள்வோம்.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியரிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அங்கிருந்த இந்திய வம்சாவளியினரைவிட, மக்கள் தொகையில் பத்து மடங்கு அதிகமிருந்த மலாய் இன மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ந்து கிடந்தது எனவும், மண்ணின் மைந்தர்களான அவர்களுக்குத் தம் வாழ்வின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வெகுகாலம் ஆனது எனவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியர்களோடு ஒப்பிடுகையில், கல்வியறிவு பெற்ற மலாய்காரர்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில்தான் மலாய்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் முன்னேறி உள்ளனர். ஆனாலும் மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும் மலாய் மக்களின் முன்னேற்றத்திலும் இந்திய வம்சாவளியினரான தமிழர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடலாகாது. மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்களைத் திரட்டிப் போராடி வரும் "இந்து உரிமை நடவடிக்கைக் குழு' என்ற அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி குறிப்பிடுவது போல ("குமுதம் ரிப்போர்ட்டர்', 13.12.07) "பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவை மேம்படுத்த – அங்கு தோட்ட வேலை உட்பட பல்வேறு வேலைகளைச் செய்வதற்காக – இந்திய மக்களை அழைத்துச் சென்றது. மலேசியாவை வளம் கொழிக்கும் நாடாக மாற்றியதில் இந்திய மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அடிமை வேலைகளைச் செய்ததற்காக, நமது மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு தர வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளோம்' என்ற சொற்களில் வரலாற்று ரத்தம் தோய்ந்து கிடக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வரலாறு குறித்து ஒரு மீளாய்வுக் கண்ணோட்டத்துடன் நாம் தொடர்ந்து செல்லலாம் என நினைக்கிறேன்.

தமிழர்கள் "இந்துக்கள்' என வேதமூர்த்தி போன்றவர்களால் குறிக்கப்படுவதும், மலேசிய நாட்டை வளப்படுத்த அடிமை உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட "தமிழர்கள்' எவர் என்பதும் நாம் அறிய வேண்டிய முதற்கண் சமூக – அரசியல் – வரலாற்றுப் புலம். ""காலங்காலமாக தங்களது குலதெய்வங்களாக வழிபட்டு வரும் கோவில்களை இடிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கின்ற வேலையில் அரசு செயல்படுகிறது. எங்களுக்குத் தெரிந்து பத்தாயிரம் இந்துக் கோயில்களை இடித்துள்ளனர். முருகன் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற அய்ந்தாயிரம் பேரை போலிசார் அடித்துத் துன்புறுத்தி யுள்ளனர்'' என்கிறார் "குமுதம் ரிப்போர்ட்டர்' நேர்காணலில் வேதமூர்த்தி. இதற்குப் பதிலளித்துப் பேசும் டத்தோ சாமிவேலு, அதே "குமுதம் ரிப்போர்ட்டர்' (6.1.2008) இதழில், ""அங்குள்ள மக்களின் எண்ணிக்கையோ பதினெட்டு லட்சம். ஆனால் இருக்கும் கோயில்களோ இருபத்து நான்கு லட்சம். இதில் பதிவு செய்யப்பட்டவை மூன்றாயிரம் கோயில்கள்தான். தினமும் ஒரு கோயிலைக் கட்டுவது, ஒவ்வொருத்தரும் ஒரு கோயிலை வைத்துக் கொள்வோம் என்பது நியாயமா?'' என்று கேட்கிறார்.

ஆயிரத்து அறுநூறு ஆலயங்களையும் நூற்று எட்டு சமய அமைப்புகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு, இந்து மக்களின் பேராதரவோடு இயங்கி வரும் இயக்கமாக "இந்து சங்கம்' மலேசியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய வம்சாவளியினர் – தமிழர்கள் – இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் இந்திய நாட்டிலோ அல்லது குடியேறிய நாட்டிலோ அல்லது புலம் பெயர்ந்த நாட்டிலோ"ஓர் இந்து' தன் உயிருக்கு நிகராகக் கொண்டாடும் / பாதுகாக்கும் / நிறுவும் முக்கிய அம்சமாக இருப்பது தன்னுடைய மத அடையாளமாகவே இருக்கிறது. இதுவே காலப்போக்கில் கிளை பரப்பி தனித்த சாதிக் குழுமங்களில் அவனை நிலைநிறுத்தி விடுகிறது. சாதி சங்கங்களை நிருவகிக்கும் தலைமைப் பீடமாகவே "இந்து சங்கம்' செயலாற்றி வருகிறது எனலாம்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட இன்றைய தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவில் கரும்பு, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை பெருமளவில் உருவாக்கி வளர்க்க, வறுமையில் சிக்குண்டு தவித்த தமிழர்கள் – எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி அழைத்துச்செல்லப்பட்டனர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், செங்கற்பட்டு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்தே பெருமளவில் தமிழர்கள் மலேசியாவில் குடியமர்த்தப்பட்டனர்.

மலேசியாவில் இந்தியர்கள் குடியமர்த்தப்பட்டது (1786 – 1957) தொடர்பான ஓர் ஆய்வில் கேர்நைல் சிங் சாந்து (K.S.Sandu) என்பவர், இவ்வாறு அழைத்து வரப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை "விவசாயத் தொழில் சாதியினர்' என வகைப்படுத்தி எழுதுகிறார். தமிழகத்தில் பண்ணை அடிமை, பண்ணை வேலையாள், படியாள் என மூன்று வகை வேலைப் பிரிவினைகளில் இத்தகைய தொழிலாளர்கள் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறு நடத்தப்படுவதற்கு அவரவர்களின் சாதி அடையாளமாகப் பயன்பட்டதாகவும், இவர்கள் தமிழகத்திலிருந்து மலாயாவிற்குக் குடிபெயர்க்கப்பட்ட போதும், இதே அடையாளத்துடனும் சாதிப் பாகுபாட்டுடனும்தான் மலாயத் தோட்டங்களில் நடத்தப்பட்டதாகவும் இவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் விவசாய பண்ணைத் தொழிலை நிர்வாகம் செய்ய பயன் பாட்டிலிருந்த "கங்காணி' முறையே இங்கும் பின்பற்றப் பட்டது எனவும், இக்கங்காணி உரிமம் சாதி அடிப்படையிலேயே வழங்கப்பட்டது எனவும் இவரது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

1892 ஆம் ஆண்டின் சென்னை வருவாய்த் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின்படி, விவசாயத் தொழிலாளருக்கான கூலி வேறுபாடுகள் சாதியின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன என அறிய முடிகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்த பள்ளர், பறையர் ஆகியோர் நியாயமற்ற அளவிலும், சமூக ரீதியாக ஒதுக்கப்படாமலும் விவசாயத் தொழிலாளர்களுமாக இருந்த ஏனைய சாதியினர், "நியாயமான' என்று சொல்லத்தக்கஅளவிலும், கூலி பெற்றதன் விளைவாக, பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வு சாதி ரீதியான வேறுபாடுகளைத் தாங்கி நிற்கும் சமூகப் பின்புலமாக நிலவியது. இன்னும் சொல்வதானால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாலை முதல் இருள் கவியும் வரை என கொடூரமான வேலை நேர நிர்பந்தத்தின் கீழ் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். ""ஏனைய சாதியினரைவிட அதிகமான வேலை நேரத்தை "மிராசுதாரர்கள்' என அழைக்கப்பட்ட பண்ணையார்களுக்காக செலவிட்டபோதும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியானது, மிகவும் குறைவாக, நியாயமற்றதாக இருந்தது. கடுமையாக உழைக்க இயலாதவர்கள் பண்ணையார்கள் மற்றும் பண்ணை அடியாட்களால் கம்பு மற்றும் இரும்புத் தடிகள் கொண்டு தாக்கப்பட்டனர்'' என "இந்தியாவில் சாதிகள்' என்ற தன் நூலில் ஜே.எச். ஹட்டன் (J.H.Hutton) என்பவர் குறிப்பிடுகிறார்.

பொருளாதார ரீதியில் ஏழ்மையான குடிமை வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உழன்றதால், தங்கள் மனம் போன போக்கில் அவர்களை மிரட்டி வேலை வாங்குவதும், எதிர்க்க முற்படும் நேரங்களில் அவர்கள் மீது வன்கொடுமைகளை ஏவுவதும் ஆதிக்க சாதியினருக்கு இலகுவாக இருந்தது. இப்படியான கொடுமைகளே, அம்மக்கள் தமிழகத்தின் விளை நிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து செல்லக் காரணமாகவும் இருந்தன. "நரகத்திலிருந்து விடுபட்டு சொர்க்கத்திற்கு செல்வதாக நினைத்துக் கொண்டுதான் மலாய தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாகக் குடி பெயர்ந்தனர்' என்கிறார் கே.எஸ். சாந்து. "சீனர்களை விட குறைவான கூலியையும், தரம் குறைந்த வாழ்நிலையையும் ஏற்றுக் கொண்ட திறமையான வேலையாட்கள்' என மலாய அரசாங்கமும் தோட்டப் பண்ணை முதலாளிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழக விவசாயக் கூலிகளை மதிப்பிட்டு இருந்தனர். தமிழக விவசாய நிலங்களில் நிலவிய பண்ணையடிமைக் கொடுமைகளைக் கண்டு அஞ்சி, மலேசியத் தோட்டங்களுக்கு விவசாயக் கூலிகளாக குடிபெயர்ந்த ஒடுக்கப்பட்ட தமிழர்கள் மீது – அதே வகையான சாதிப் பாகுபாடுகளும், கூலி முறைமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளுமே மலாயாவிலும் சுமத்தப்பட்டு, சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர்.

1844 – 1941 காலகட்டத்தில் மலாயாவிற்குக் குடியேறிய இந்தியத் தொழிலாளர்களின் (அரசு புள்ளி விவரப்படி) எண்ணிக்கை 2,725,917 ஆகும். கோலாலம்பூர் தொழிலாளர் துறையின் 1923 – 1935 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இக்காலகட்டங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து 55,804 பேரும், வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து 1,45,844 நபர்களும், ராமநாதபுரத்திலிருந்து 19,366 பேரும், தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து 59,593 பேரும், திருச்சியிலிருந்து 93,698 நபர்களும், தஞ்சை மாவட்டத்திலிருந்து 66,937 நபர்களும் மலாயாவிற்குக் குடியேறியிருந்தனர். மிக அதிக எண்ணிக்கையில் 1926 இல் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து மட்டும் 38,360 பேர் மலாயாவிற்குக் குடியேறினர். வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலும் குடியேறிய சாதிகளாக வன்னியர்களும் பறையர்களும் இருந்தனர். தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து பள்ளர், பறையர், மறவர், கள்ளர், அகமுடையார் போன்ற சாதிகள் குடியேறினர்.

தேயிலை தோட்டத் தொழிலாளர் போராட்டம் ஒன்றில் தமிழர்கள்

விரைந்து வளர்ந்து வந்த மலாயா மாநிலங்களின் நிர்வாகத் துறைகளுக்கு எழுத்தர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட படித்த வர்க்கத்தினர் தேவைப்பட்டபோது, மலையாளிகளும் இலங்கை ஆதிக்க சாதித் தமிழர்களுமே 1920களிலிருந்து பெருமளவில் குடியேறத் தொடங்கினர். சாதி ரீதியாகக் கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இத்தகைய வேலைவாய்ப்புகளைப் பெறுவது என்பது, கனவிலும் நடக்காத ஒன்றாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மிகவும் படித்த சாதியினராக இருந்த பார்ப்பனர்களுக்கு ஆங்கிலேய அரசாங்கத்திலும் இந்திய மன்னர்களின் அரண்மனைகளிலும் போதுமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதால், அவர்கள் அக்கால கட்டங்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் நேரவில்லை.

அதனால் தென்னிந்திய பிரிட்டிஷ் நிர்வாகங்களில் பார்ப்பனர்களோடு போட்டியிட்டு பதவிக்கு வர இயலாத, "சாதி இந்துக்கள்' (Non-Brahmins) என்று அழைக்கப்பட்ட ஏனைய சாதி இந்துக்கள் மலாயா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறி நிர்வாகத் துறை போன்ற பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

1921 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரப்படி, பார்ப்பன ஆண்களில் 71।5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 28.21 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். செட்டியார்களில் 39.5 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.34 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், நாடார்களில் 20 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 0.75 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும், வெள்ளாளர் (பிள்ளை, முதலியார்)களில் 24.2 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும் அவர்களில் 2.37 சதவிகிதத்தினர் ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மலாயா போன்ற நாடுகளுக்குக் குடியேறி நிர்வாகப் பணியிடங்களை ஆக்கிரமித்தசாதியினராக, செட்டியார்களும் வெள்ளாளர்களும் இருந்தனர். இலங்கையிலிருந்து மலாயாவிற்கு இதுபோன்ற பணிகளுக்கு வந்தவர்களும் வெள்ளாளர்களே. இவர்களே தென்இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு விவசாயக் கூலிகளாக, உழைக்கும் மக்களை "நைச்சியம்' பேசி அழைத்துச்(கடத்தி) சென்ற முகவர்களாக செயல்பட்டுள்ளனர். காலப் போக்கில் இவர்களில் சிலரே, மலாய தோட்டப் பண்ணைகள் சிலவற்றின் உரிமையாளர்களாகவும் வளர்ந்து, உழைக்கும் மக்களைச் சுரண்டி தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

தலித்முரசு ஜீலை 2009ல் எழுதியது

– அடுத்த இதழிலும்

Monday, May 25, 2009

ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் - 3

- இளம்பரிதி

ஈழம்: குருதியில் பூக்கும் நிலம் 1
ஈழம்: குருதியில் பூக்கும் நிலம் 2

ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்தபோது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும் போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது?

Eelamதமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமது அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சியையே முதன்மையான ராணுவ முகாமாக அமைத்துக் கொண்டனர். ஆனையிறவு ராணுவத் தளத்தை வெற்றி கொண்டமை, முல்லைத் தீவில் பாரிய ராணுவ முகாமொன்றைத் தகர்த்தமை போன்றவை, புலிகள் கிளிநொச்சிக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு ராணுவ ரீதியாகக் கிடைத்த முக்கிய வெற்றிகள். இந்த வெற்றிகளின் பின்னணியில் பலமடைந்த நிலையிலேயே – அரசியல் பேச்சுகளுக்கும், 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் புலிகள் முன்வந்திருந்தனர். இலங்கைத் தீவில் கொழும்புக்கு அடுத்த பெரிய நகரமான யாழ்ப்பாணத்தின் புகழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, "கிளிநொச்சி' உலக நாடுகள் பலவும் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாறியிருந்தது. இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கருத்துருவின் அடையாளமாக யாழ்ப்பாணமும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக கிளிநொச்சியும் இருப்பதாகவே குறியீட்டளவில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு புறம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே, இலங்கை அரசு தனது ராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசின் உதவிகளும், கருணாவின் ஆலோசனைகளும் – கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தின் வெற்றிகளுக்கு மிகவும் துணை புரிந்துள்ளன. கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பூநகரியில் நுழைந்த இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போரே – இரு படைப்பிரிவினரும் மோதிக் கொண்ட கடைசிக் களமாக இருக்கிறது. பூநகரியிலிருந்து பின்வாங்கிய விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை அரண் போலக் காப்பர் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இலங்கை ராணுவம் 2.1.09 அன்று இலங்கையின் தேசியக் கொடியை கிளிநொச்சியில் பறக்க விட்டபோது, அடுத்த பேரிடியாக இருந்தது. பூநகரியில் கடுமையான போரை எதிர்கொண்ட இலங்கை ராணுவம் கிளிநொச்சியில் நுழைந்தபோது, தமிழீழத்தின் அந்த அரசியல் தலைநகரம் – பொதுமக்களோ, புலிகளின் படைப் பிரிவினரோ எவருமற்று வெறிச்சோடிப் போயிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் "தேசியக் கனவை' வெறுமை சூழ்ந்துவிட்டதாகவே நாம் உணர முடிந்தது. இதனாலேயே சனவரி 5 அன்று கிளிநொச்சி வீழ்ந்ததை, இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் வெற்றி விழாவாகக் கொண்டாடினர்.

முல்லைத்தீவு இலங்கை ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட கணத்திலேயே, இரண்டரை லட்சம் மக்கள் வடக்கு வன்னிப் பகுதியில் சிக்கியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜபக்சே அரசு, புலிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையிலும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து ஈழ மக்களை அந்நியப்படுத்தும் நோக்கத்திலும் – "விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்' என்ற குற்றச்சாட்டை சுமத்தி, போர் என்ற பெயரில் மக்களையே கொன்றழித்தது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்களை உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கி விட்டது. 2009 சனவரியிலிருந்து இன்று வரை 9,500 பேர் இலங்கை ராணுவத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கை, கால்களை இழந்து ஏறத்தாழ 30,000 பேர் நிரந்தர ஊனமாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சரிபாதியினர் குழந்தைகள்.

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் இயங்கும் "உலக வன்முறைகள் கண்காணிப்பு மய்யம்', “பொதுமக்களுக்கு எதிரான போர் வன்முறையில், உலகத்திலேயே இலங்கை அரசுதான் முதலிடம் வகிக்கிறது'' என அறிக்கை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை ஒன்று, ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து வரும் கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழர் – சிங்களர் இரு தரப்பிலும் ஏறத்தாழ 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத் தரப்பில் மட்டும் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகிறது.

1995இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கைப் படைக்குத் தலைமையேற்றிருந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை துன்புறுத்தி, இறுதியில் கொன்று ஒரே இடத்தில் புதைத்து விட்டான். ஈழ வரலாற்றில் "செம்மணி' படுகொலைகள் என அழைக்கப்படும் இக்கொடுமை குறித்து இதுவரை எவ்வித நீதி விசாரணையும் இலங்கை அரசால் நடத்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களான பசில் ராஜபக்சே, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா ஆகிய இருவர் மீதும் அமெரிக்க அரசின் முன்னாள் துணை அட்டார்னி ஜெனரல் புரூஸ் பெயின், 3,700 தமிழர்களைக் கொன்றது, 10,000க்கும் மேற்பட்டோரைக் காயமடையச் செய்தது, 13 லட்சம் மக்களை இடம் பெயரச் செய்தது'' உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இன்றைக்கு வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வவுனியா கொண்டு வரப்பட்டு, நிரந்தரத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு வரப்படும் வழியில், இடைத்தங்கல் முகாம்களில் விசாரணை என்ற பெயரில், இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கும், கர்ப்பிணிப் பெண்களை கருவழிப்பிற்கும், இளைஞர்களைக் கடும் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தி, சிங்கள ராணுவத்தினர் பழி தீர்த்து வருகின்றனர். யூத இனப்படுகொலைகளின் மரண முகாம்களைப் போலவே, இலங்கையின் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபேன்ட், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பிரான்ஸ், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை பேரினவாத அரசின் வரைமுறையற்ற படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தும் கூட, இன வெறியாடும் வார்த்தைகளில் ராஜபக்சே "விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது' என ஆணவத்துடன் மறுத்து விட்டார்.

இலங்கை பிரித்தானிய அரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட போது, 75 லட்சமாக இருந்த சிங்கள மக்கள் தொகை இன்று இரு மடங்காகிவிட்டது. ஆனால் 26 லட்சமாக இருந்த தமிழர்களின் மக்கள் தொகை அதே அளவில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக் காலமாக உள்நாட்டிலேயே தொடரும் இடப்பெயர்வுகள், படுகொலைகள், நிரந்தரமற்ற வாழ்க்கை ஆகியவற்றால் தமிழ் மக்களின் பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, சிறுபான்மைச் சமூகமாக அதிகாரமோ, உரிமைகளோ கோர முடியாத எண்ணிக்கையில் பலவீனப்படுத்தும் கொடூர நடவடிக்கையாகவே கர்ப்பிணிப் பெண்களின் மீதான கருவழிப்பு வரை, சிங்களப் பேரினவாத வெறியை இலங்கை அரசுகள் வளர்த்தெடுத்தன. கிழக்கு மாகாணத்தில் மட்டும் 38,000 இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, புனர் வாழ்வுக்கான வழியற்று இருக்கின்றனர்.

“ஒரு வேளை கிளிநொச்சியை மட்டுமல்ல, முல்லைத் தீவையும் சேர்த்தே ராணுவம் பிடித்தாலும், ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் ஓயாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். காரணம், அது மக்களின் போராட்டம். தொடர் போரால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து, சோமாலியாவைப் போன்ற நிலைமை அங்கு உருவாகும். ஆனாலும், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழப் பழகியிருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைத்தே தீரும்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ("குமுதம் ரிப்போர்ட்டர்' 4.11.2008) நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்ற போதும், கடந்த காலத்தைப் போலான நம்பிக்கைகளையே, வெறுமை சூழ்ந்திருக்கும் இத்தருணத்திலும் விதைத்துக் கொண்டிருக்க முடியாது. "வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல' என மீளவும் ஒரு சகாப்தம் முன்னெடுக்கப்படுமாயின் இயக்கம் – அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இழைத்த தவறுகளும் வரலாற்றுப் பிழைகளும் கூட – முதன்மையாகக் கணக்கிலெடுக்கப்பட வேண்டும். "சோமாலியாவைப் போன்ற நிலைமை' அங்கு இப்போதே தொடங்கிவிட்டது. ஆனால், அந்நிலைமை "மீளவும் ஒரு சகாப்தம்' உருவாவதற்கான மனித ஆற்றலையும் அரசியல் உறவையும் இழந்திருக்கும்.

ஆயினும் போர் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வரப்போகிறது என "முடிவு' செய்து கொண்டு, தமிழகத்திலும் புலம்பெயர் சூழலிலும் ஆளுக்கு ஓர் அரசியல் தீர்வையும் ஆரூடத்தையும் தத்தமது சார்பு நிலைகளுக்கொப்ப வெளிப்படுத்தி வருகின்றனர். "ஆயுத வழிப் போராட்டமா? மக்கள் திரள் அறப்போராட்டங்களா?' எனத் தொடங்கிய ஈழ விடுதலைப் போராட்ட விவாதம், "விடுதலைப் புலிகளா? ஏனைய அமைப்புகளா?' என வளர்ந்து, "விடுதலைப் புலிகள் ஆதரவா? எதிர்ப்பா?' என கடந்த இருபது ஆண்டுகளாக நிலை கொண்டிருந்தது. "புலி இளைத்தால்...' என்ற வழக்குமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. "புலிகளுக்கு முன், புலிகளுக்குப் பின்' என்ற கருத்தமைவுகளை பலர் இப்போதே அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டனர்.

"எதுவரை?' என்ற லண்டனிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழில் (ஏப்ரல் – மே 2009) அ. மார்க்ஸ், "புலிகளுக்குப் பிறகு' எனத் தலைப்பிட்டே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “முல்லைத்தீவில் மேலும் மேலும் புலிகளின் ஆடற்களம் சுருங்கிக் கொண்டே போகிறது. வெகு விரைவில் அவர்களின் கதை முடிக்கப்படலாம் எனப் பத்திரிகைகள் ஆருடங்கள் எழுதுகின்றன. கொரில்லாப் போர் முறைக்குத் தாவலம் அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடலாம் என்கிற ஊகங்களும் சொல்லப்படுகின்றன.... புலிகள் ஒழிக்கப்படுவதோடு பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை'' என ஒரு வெகுஜன தமிழ் சினிமாவின் இறுதிக் காட்சிகளை முன் அனுமானிப்பது போல லகுவாக, கொச்சையாக எழுதிச் செல்கிறார். எவ்வளவுதான் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும், ஒரு விடுதலை இயக்கத்தை இவ்வளவு தூரம் எளிமைப்படுத்துவது அறமன்று.

கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையிலிருந்து "கள்ளத் தோணி'யில் தமிழகம் தப்பி வர ஒரு நபருக்கு குறைந்தது 25,000 ரூபாய் வேண்டும். ஒரு குடும்பம் தப்பி வர ஒரு லட்சம் ரூபாயாவது வேண்டும். ஆனால், அதே காலத்தில் "அகதி' எனப் பெயர் தாங்கி அய்ரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புக, 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இக்குறிப்பை கவனத்தில் இருத்தி, “மட்டக்களப்புப் பகுதியில் படைபலம் அதிகம்; யாழ்ப்பாணப் பகுதியில் பணபலம் அதிகம். வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்கள் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் எனக் கேட்டால், பணம் தந்து சமாளித்து விடுவார்கள் அல்லது புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். போரில் மடிந்த, 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கில் மக்கள் தொகை அதிகம். கிழக்கில் குறைவு. ஆனால் படைப்பிரிவில் கிழக்கு மாகாணப் போராளிகள்தான் அதிகம். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை'' என்ற கருணாவின் விமர்சனம் ("தினமலர்' 14.1.09) ஒன்றை அவதானித்தால், கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டக் காலத்தில், வேளாளர்கள் மற்றும் பிற சாதியினரின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளலாம்.

கருணாவின் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வதாலேயே, துரோகத்தின் பக்கம் நிற்பதாகப் பொருளல்ல. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில் நின்றும், அதே வேளையில் தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் – ஓர் ஒடுக்கப்பட்ட தன்னிலையாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துமே, இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் நிலமற்றவர்களாக, குறைவான வருவாய்ப் பிரிவினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர், பல லட்சங்கள் கொடுத்து அகதியாகக் கூட அந்நிய நாடுகளுக்குச் செல்ல இயலாதவர்களாக, யுத்தக் களங்களில் இடம் பெயர்ந்து கொண்டு, போராட்டமே வாழ்க்கையென மடிந்தும், ஊனமுற்றும் உருக்குலைந்தும் போகிறார்கள். கடந்த காலங்களில் போருக்குப் புறமுதுகிட்டு, புது வாழ்க்கை தேடிப் போனவர்கள் மிகுதியும் வேளாளர்களே.

“ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக் கொள்ள முடியாது, இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். போராட்டத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் வெளியேறிவிட்டு, மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். அதன் வடிவமாகத்தான் லட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், அய்.நா. வாசலில் தீயிட்டுச் செத்துப் போனான்'' என "ஆனந்த விகடன்' இதழுக்கு (1.4.2009) கனடாவிலிருந்து எழுதிய பெயர் தெரியாத ஒரு தமிழ்ச் சகோதரியின் கடித வரிகள் எம்மை ஆற்றுப்படுத்த முடியாது. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை "சாதிக் கண்' கொண்டு பார்ப்பதாகக் குற்றம் சுமத்தி விடவும் இயலாது.

யாழ்ப்பாணத்திலிருந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்கச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்த தமது உறவினருக்கு 1983இல் எழுதிய கடிதம் ஒன்றில், “அவ்விடம் இருந்து வரும் நளம், பள், பறை (நளவர், பள்ளர், பறையர்) ஆகியதுகளுடன் இங்கு கலந்து அவமானப்படும் தலையெழுத்தைத் தவிர, மற்றபடி வாழ்க்கை எல்லா விதத்திலும் பரவாயில்லை'' (மனோன்மணி சண்முகதாஸ் – மேற்கோள் : சாதியும் துடக்கும்) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஈழத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. 1983இல் இருந்த சாதி மேலாதிக்க மனநிலையில், தேசிய இன விடுதலைப் போராட்டச் சூழல் மாற்றங்களைத் தந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும், பாரிய அளவில் சாதிய உளவியல் தகர்க்கப்பட்டதற்கான வாய்ப்புகள் ஈழத்தைப் போல, புலம் பெயர்ந்திருக்கும் தமிழகத்திலோ, அயல் நாடுகளிலோ உருவாக்கப்படவில்லை. நேர்மையோடு பரிசீலனை செய்யும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது.

தமிழகத்தின் அகதி முகாம்களில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஏதிலிகளைப் பற்றிய உணர்வு ஏதுமற்று, கனடா, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா இன்னும் பல நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு "ஆன்மீகச் சுற்றுலா' வரும் ஆதிக்கச் சாதி ஈழத் தமிழரின் உணர்வை – "போகிறான் போ மூட நம்பிக்கை' என ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனென்றால் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை "வெள்ளாள நயினார்'களால் "அடிமைக் குட்டிகள்' என அழைக்கப்பட்டு, வேளாளப் பரம்பரையின் சிறைக் குடிகளாக அடிமை ஊழியம் செய்து வந்த கோவிலர், நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் மட்டுமல்ல, தேச வழமைச் சட்டப்படி கீழ் சாதியினராகவே மதிப்பிடப்பட்ட கரையாளர் உட்பட ஒடுக்கப்பட்ட இனக் குழுக்களே – இன்றைக்கும் போர்க் களத்தில் பொடியன்களாக, கரும்புலிகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்த போது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும்போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது? சாவு வீட்டில் யாம் சாதி பாராட்டுவதாகக் குற்றம் சுமத்த முயன்றால், இழவு சொல்லி, சடலம் காவி, மாரடித்து அழுது, வெள்ளை கட்டி – மாற்றுக் கொடுத்து, மயிர் நீக்கி, தீச்சட்டி காவி, பொரி எறிந்து, சவம் எரிக்க விறகு வெட்டி, தென்னை மேய்ந்து, பறை மேளம் கொட்டி, பிணத்தை எரிப்பது வரை, எம் மக்களுக்கு சாவு வீட்டிலும் பணிகளைப் பிரித்துத் தந்து ஊழியம் செய்ய வைத்த உங்கள் கொடுமைகளைச் சொல்லி அழுவதைத் தவிர, எமக்கு வேறு நாதியில்லை.

“தன்னை ஏற்றுக் கொள்ளாத தலைவர்களையெல்லாம் கொன்றவர் பிரபாகரன். தமிழ் ஈழம் உருவானால் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தவே விரும்புவதாக பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனையோ, வேறு எந்தத் தனிப்பட்ட நபரையோ தி.மு.க. ஆதரிக்கவில்லை. ஈழத்தில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தகுதி, பற்று, பாசம், தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்களுக்கு அதற்கான உரிமை சிறிதும் இல்லை'' (3.2.09, தி.மு.க. பொதுக்குழுவில்) என பார்ப்பன அதிகார வர்க்கத்திற்குக் காட்டித் தரும் வேளாள சாதி இந்துக் கட்சியின் தலைவரான மு. கருணாநிதி உரிமை கொண்டாடும் போது, அனைத்தையும் இழந்து, வரலாற்றின் கொடும் கரங்களில் வாழ்வை ஒப்புவித்திருக்கும் எம் மக்கள் பேசக்கூடாதா? ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, இந்திய மண்ணில் நிகழ்ந்து வரும் அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கவும், தீர்வு காணவுமான தகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை, மு.க. உள்ளிட்ட எவருக்கும் நாம் முரசறைந்து சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

“விடுதலைப் புலிகள்தான் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தலைமை ஏற்க வேண்டும் என்று நான்கு கட்சிக் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறோம். அந்தக் கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான் என்ற முடிவில் இருக்கிறார்கள்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுவதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். குருதி கொப்பளிக்கும் இயக்க வரலாற்றின் ஊடாகத்தான், ஈழ மக்களின் கனவும் எதிர்காலமும் தளும்பி நிற்கிறது. தேர்தல் வாக்குறுதி, கூட்டணி தர்மம் என எல்லாவற்றையும் நன்கு அறிந்த கருணாநிதியும், ஈழத் துயரத்தின் "முடிவை' எதிர்நோக்கியிருக்கும் மனித உரிமைக் காவலர்களும், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்ற வகையில் ஈழ மக்களுடனான உரையாடலிலிருந்து – விடுதலைப் புலிகளைப் பிரிக்கவோ, தவிர்க்கவோ இயலாது என்பதை உணர வேண்டும்.

சென்னையில் 26.12.2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு, 15.1.2009 அன்று மறைமலை நகரில் ஈழத் தமிழரின் துயர் நீக்க உண்ணா நோன்பு, 2.4.2009 முதல் தமிழர் நடைபயணம் என உணர்வுப் பூர்வமாகச் செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளையும் தொல். திருமாவளவனையும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே' எனத் தலைப்பிட்ட நாளிதழ்களின் (6.2.2009) விளம்பரம் வழியே, “இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில் ஒன்றாக இருப்போம் வாரீர்'' என நைச்சியம் பேசி, "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்'திலிருந்து "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'க்குள் உட்செரித்துக் கொண்டதைப் போல, எம் மக்களின் குருதிச் சேறாகிப் போன வரலாற்றை – கலைஞரால் உண்ணவோ, விழுங்கவோ அல்ல; முகரவோ கூட முடியாது.

“தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், சிங்கள மாநிலம், பொதுவான மய்ய அரசு, கூட்டாட்சி அரசியலமைப்பு'' என 1949லேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் முன் வைத்த அரசியல் தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் – ஆயுதவழிப் போராட்டமோ, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் பாரிய மனித இனப் படுகொலையோ நிகழ்ந்திருக்க முடியாது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், அய்க்கிய தேசியக் கட்சியும் சிங்கள தேசிய இன அரசியலைப் பாசிச வரலாற்றோடும், சிங்கள உழைக்கும் மக்களை மீள முடியாத குற்ற உணர்ச்சியிலும் புதைத்து விட்டன. ஆனால், இதை உணர்ந்திருப்பவர்கள் மிகச் சிலரே.

இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் பல்லின மக்களின் அடிப்படைத் தேவைகள், சிறப்புரிமைகள், அரசியல் போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய கோரிக்கைகள் இவற்றை கவனத்தில் கொண்டு, விடுதலை வரலாறு நகர்ந்து சென்றிருக்க வேண்டிய பாதைகளையும் நம்பிக்கையையும் மீளாய்வது என்ற அக்கறையின் பொருட்டே, நாம் விவாதிக்கத் தளைப்படுகிறோம். அடிப்படையில் "தனித் தமிழீழம்' அதன் கருத்தியல் பின் புலத்தில், நிலப்பிரபுத்துவ எச்சங்களைக் கைகழுவாத, ஒரு முதலாளித்துவக் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டுமானம் குறித்தும் மிகை மதிப்பீடுகளையே எப்பொழுதும் முன்வைத்து வந்த தமிழ்த் தேசியவாதிகள், “தெற்காசியாவில் அமையப் போகும் முதல் சோசலிசக் குடியரசு – தமிழீழம்'' என்றெல்லாம் மிகையுச்சமாய் (தியாகு, சுப.வீரபாண்டியன், பெ. மணியரசன் போன்றோர்) எழுதியும் பேசியும் வந்தனர். மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரமாக, சோசலிசம் தமிழ்த் தேசியவாதிகளின் நாவில் சுழன்று கொண்டிருக்கிறது.

உலகில் சோசலிசக் குடியரசுகளை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் யாவும், எந்தவொரு நாட்டிலும் மக்கள் திரள் போராட்ட வடிவங்களோடு இணைந்தே நின்றன. ஆனால் திலீபனின் உண்ணா நோன்பு தியாகத்திற்குப் பிறகு, தமிழீழ விடுதலையின் ஏகபோக பாத்திரத்தை விடுதலைப் புலிகள் கைக்கொண்டு, மக்கள்திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை மழுங்கடித்து விட்டனர். புகலிடங்களில் வாழ்ந்து வருபவர்கள் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தி வந்தனர். ஈழத்தில் புலிகளின் அரசியல் துறை ஒரு நிர்வாக எந்திரம் போல மட்டுமே செயல்பட்டு வந்தது. அனைத்து மக்களின் விருப்பங்களும் பங்கேற்பும் ராணுவத் துறையிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது.

பலவீனமான மக்கள் போராட்டத்தினின்று அந்நியப்பட்டு, நம்பிக்கைகளிலேயே காலம் கழித்து வந்தனர். இத்தகைய நம்பிக்கைகளின் ஊடாகத்தான் இந்து மதமும், சாதி அணிகளும் தம்மைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன. எப்பொழுதும் குப்பி கடிக்கத் தயாராக இருந்த இயக்க உணர்வில் சாதி பாராமுகத்துடனேயே இருந்தது. ஆனால் தேங்கிக் கிடந்த வாழ்வு தழைக்குமென்ற கனவிலும், சமூகக் கட்டுமானத்திலும் சாதியம் குடிகொண்டேயிருந்தது. புகலிடங்களிலோ காதலிலும், மண நிகழ்வுகளிலும், சடங்கு – சம்பிரதாயங்களிலும், தோழமையிலும் கூட சாதி கொடிகட்டிப் பறந்தது; பறக்கிறது. நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்திலும் அபின் மயக்கத்திலும் வீழ்ந்து கிடந்த மங்கோலியப் பேரினத்தை நெடும் பயணங்களில் கடந்து, உணர்வெழுப்பி, அறிவூட்டி, செம்படையாக்கிய பிறகே மாவோவின் "சீன மக்கள் குடியரசு' மலர்ந்தது. சீனத்தில் மத நம்பிக்கைகளின் இடத்தை "விடுதலைக் கனவு' பதிலீடு செய்தது. ஈழத்திலோ விடுதலைக் கனவை மத – சாதி விருப்பங்கள் ஊடறுத்தன.

Mukilanதமிழர்களின் "இந்து மத அடையாளமே' மக்களின் நான்கில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களை விடுதலைப் போராட்டத்தினின்றும் அந்நியப்படுத்தியது. கூடுதலாக, முஸ்லிம்களும் மொழியை விட மத உணர்வுகளையே முதன்மைப்படுத்தினர். மலையக மக்கள் தமிழீழத்துடன் இணைய நிலம் தடையாகிப் போனது எனில், முஸ்லிம்களுக்கு மதம்.

"சோசலிசத் தமிழீழம்' என 80களில் இயக்கங்களில் விவாதிக்கப்பட்ட சொற்றொடர், செயல்திட்டமாக வளர்த்தெடுக்கப்படவில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தத்துவ அடித்தளம் குறைந்த அளவேனும் மதச் சார்பற்றதாகக் கூட முன்மொழியப்படவில்லை. துரோக முத்திரை குத்தப்பட்ட – தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய – சில கொலைகள், சகோதர உயிரழிப்புகள், முன்னணிகளும் மக்களும் அரசியல் கல்வியால் பயிற்றுவிக்கப்படாதது போன்ற உலகின் பார்வைக்கு வந்த செயல்கள் – இயக்கத்தை ராணுவ வாதம், பாசிசம் என விமர்சித்து, இறுதியில் "பயங்கரவாதம்' என்ற முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தின.

சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், சித்திரவதைகள், வன்புணர்ச்சிகள், கருவழிப்புகள், கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், கிளஸ்டர் குண்டுகள், பதுங்கு குழிகள், நெருப்புக் (பாஸ்பரஸ்) குண்டுகள், எறிகணைகள், பட்டினிச் சாவுகள் எனப் பேரின கொலை வெறியின் யுத்த பயங்கரத்தையும் மரண வாழ்வின் உச்ச நிலையையும் தமிழீழ சமூகம் மலையை விழுங்குவது போல கடந்து வந்திருக்கிறது. தடை செய்யப்பட்ட நாடுகளிலெல்லாம் இயக்கத்தின் கொடியேந்தி, ஈழமக்கள் கடந்த சில மாதங்களாக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்து விட்டதாக, இலங்கை அரசும் இந்திய சூழ்ச்சியும் இறுமாந்திருக்கின்றன. ஆனால், இயக்கம் அரசியல் ரீதியாக வென்று விட்டதாக நாம் உறுதி கொள்ளலாம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களாக உலகெங்கும் வாழும் ஈழ மக்கள் மாறியிருக்கின்றனர். அவ்வகையில் இது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியும் கூட. "வாளெடுத்தவன் வாளால் வீழ்வான்' என முதலாளித்துவ ஜனநாயகம், போராடும் மக்களை எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தைப் போராடும் மக்களின் "எதிரிகளே' தீர்மானிக்கின்றனர்.

ஈழவிடுதலைப் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் உலகின் கவனத்திற்கு வந்திருக்கும் காலகட்டம் இது. "தனி ஈழமே தீர்வு' எனும் முக்கியத்துவம் உலக நாடுகளால் உணரப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை நோக்கி நகர்ந்தால், பவுத்தம் மட்டுமே அரச மதம் என்ற மேலாதிக்கம் நீக்கப்பட்டு, இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படவேண்டும். தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சிப்பகுதிக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். மத – இன அடிப்படையிலான மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் அமைப்புகளைத் தடை செய்து, மத உரிமைகளை தனி மனித உரிமையாக்கி, அனைத்து மக்களுக்குமான அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய, புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களை மொழிவழி குடிமக்களாக அங்கீகரித்து, அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். வடக்கு – கிழக்குப் பகுதிகளை இணைத்து பூர்வீகக் குடிமக்களின் தாயகமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஈழ மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் அய்.நா. தலைமையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

தேவைப்படின், வடக்குப் பகுதி, கிழக்கு மாகாணம், இசுலாமிய சமூகம் மற்றம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் கருத்துக்களை அறிய கிழக்கு திமோர், கொசோவா ஆகிய நாடுகளில் நடந்ததைப் போன்ற வாக்கெடுப்புகளை அய்.நா. மேற்கொள்ள வேண்டும். போர்க் குற்றங்கள் குறித்து உலக நீதி மன்றம் முழுமையான விசாரணை ஒன்றையும் நடத்த முன் வரவேண்டும். அமைதி திரும்புவதற்கான இந்நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுமாயின், "விடுதலைப் போராட்டம்' இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதாகவே பொருள் கொள்ளப்படும். சிங்கள அரசு பெற்றிருப்பது ராணுவ ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக அது கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. "வெற்றிக் களிப்பு' சிங்களப் பேரினவாதத்தை மீண்டும் நிலைநாட்டுமெனில், “இலங்கை நிம்மதியாக இருக்க முடியாது'' என்ற விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை சிங்கள சமூகமும், உலக நாடுகளும் அலட்சியப்படுத்தக் கூடாது.

அனைத்து மனித விழுமியங்களும் ஜனõயகக் கோட்பாடுகளும் தழைக்கும் நாடாக, இலங்கையை மாற்றியமைக்கும் வரலாற்றுக் கடமை – இன்று சர்வதேச சமூகத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கென தார்மீக ரீதியாகப் போராட வேண்டிய பொறுப்புணர்வு தாய்த் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமானது. "அண்டை வீட்டுக்காரன் பசியோடிருக்க, நீ மட்டும் உண்ணலாமா?' எனும் (திருக்)குர்ஆனின் வலியுறுத்தலை, மதம் கடந்த குற்றவுணர்ச்சியாக ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் உணர வேண்டும். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும். 

தலித்முரசு ஏப்ரல் 2009ல் எழுதியது.

Wednesday, April 29, 2009

ஈழம் - குருதியில் பூக்கும் நிலம் 2


ஈழத் தமிழர்களின் உரிமைகளைத் தீவிரமாக முன்னெடுக்க 1971இல் தமிழ் மாணவர் பேரவையும், 1972இல் தமிழ் இளைஞர் பேரவையும் – நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே – சில இளைஞர்களால் தொடங்கப்பட்டன. இவை முறையான அமைப்பு வடிவமோ, கொள்கைத் திட்டமோ இன்றி செயல்பட்டு வந்தன. இச்சூழலில்தான் 1974 சனவரி 3 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, எவ்வகை அரசியல் சார்புமற்றுத் தமிழறிஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் இறுதி நாளன்று, இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் கலவரத்தை ஏற்படுத்தி, 9 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு, தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் இருவர் உட்படப் பதினொரு தமிழரின் படுகொலைக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் சந்திரசேகராவைப் பழிதீர்க்க, வெடிகுண்டுகளுடன் சென்ற தமிழ் இளைஞர் சிவக்குமரன், தனது நடவடிக்கை தோல்வியைத் தழுவியதால், காவல் துறையின் பிடியிலிருந்து தப்பிக்க "சயனைட்' விழுங்கி உயிர் நீத்தார். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "சயனைட்' குப்பி கடித்த முதல் போராளி எனும் பெருமையோடு, இவரது சிலை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது.

தமிழர் உரிமை பறிப்பு, தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தடை, தமிழ் மக்கள் வாழ்வின் மீதான நெருக்கடி எனச் சிங்கள அரசின் இனவெறி மேலாதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இச்சூழலில்தான் 14.5.1976 அன்று வட்டுக்கோட்டை – பண்ணாகம் என்ற இடத்தில் தமிழ்த் தலைவர்களும் மக்களும் ஒன்று கூடி, "தனி ஈழமே' தீர்வு என மாநாட்டுத் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தனர். இத்தீர்மானத்தை முன்னிறுத்தி, 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் 19 இடங்களில் 18 இல் தமிழர் தலைவர்கள் வெற்றி பெற்றனர். இது, தனி ஈழக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கணிக்கப்பட்டது. இதற்கு முன்னரே, ஆயுதம் தாங்கிப் போராடுவதே விடுதலைக்கு வழிவகுக்கும் என முடிவெடுத்து, சில இளைஞர் குழுக்கள் தலைமறைவாகச் செயல்படத் தொடங்கி யிருந்தன. ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 மே மாதத்தில் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு வடிவத்தோடு, தமது இயக்கத்தைத் தொடங்கியது. இதையொட்டியே, 1979 சூலையிலிருந்து இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமும், அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டன.

தமிழர்களிடையே தமிழீழக் கோரிக்கை செல்வாக்குப் பெற்றதை, தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் அறிவுச் செயல்பாடாகவே சிங்கள அரசு கருதியது. இதனை முறியடிக்கும் வகையில் தென் ஆசியாவின் மிகப் பெரியதும் மிக அரிய நூல்களைக் கொண்டதுமான, தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நூலகம் 31.5.1981 அன்று நள்ளிரவில் இலங்கை ராணுவம் மற்றும் காவல் துறையால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1933 இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா என்பவரின் முயற்சியால் 844 நூல்களுடன் தொடங்கப்பட்டு, 1959இல் பொது நூலகமாக விரிவடைந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களும், தமிழர் வரலாறு கூறும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகளும் தீக்கிரையாகின. இதிலிருந்தே, தமிழர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களைத் துடைத்தழிப்பதில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பேரினவாத வெறியைப் புரிந்து கொள்ள முடியும். 1983இல் வெலிக்கட சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 56 போராளிகள் கடும் துன்புறுத்தலுக்குப் பிறகு கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் தமிழ் இளைஞர்களைப் பெருமளவில் ஆயுதப் போராட்டப் பாதைக்கு அணி திரட்டின.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் "கறுப்பு சூலை' என அழைக்கப்படும், 1983ஆம் ஆண்டின் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலுக்குக் கொழும்பு நகரத்தில் மட்டும் 3000 தமிழர்கள் பலியாகினர். தமிழர்களுக்கு உடைமையாயிருந்த ஆலைகள் உட்படப் பல்வேறு சொத்துகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில் தொடங்கிய ராணுவத் தாக்குதல், 1987ஆம் ஆண்டு மே மாதம் "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற பெயரில் யாழ்குடா நாட்டை முற்றுகையிட்டு, தமிழர் உயிர் வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதங்களையும் அழிக்கும்வரை நீண்டது. இக்கால கட்டங்களில்தான் இலங்கையிலிருந்து ஏறக்குறைய பத்து லட்சம் தமிழர்கள் அகதிகளாக, இந்தியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
1970களின் இறுதியிலிருந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை அல்லது படுகொலை செய்யப்படும்

காலம்வரை – எல்.டி.டி.ஈ., பிளாட், ஈராஸ், இ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப்., டெலோ என அனைத்து ஈழப் போராளிக் குழுக்களும் இந்திய ராணுவத்தின் உதவியோடு, "ரா' உளவுப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இந்திய ஆளும் வர்க்க அதிகாரிகளால் சில ஆண்டுகள் கையாளப்பட்டதன் விளைவாக, இப்போராளிக் குழுக்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட, சகோதரச் சண்டைகளில் போராளிகள் பலரும் ஒன்றுமறியா மக்களும்கூடக் கொல்லப்பட்டனர். 1971இல் பாகிஸ்தான் மீது படையெடுத்து "பங்களாதேஷ்' என்ற நாட்டை உருவாக்கியது; பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டியது; அணிசேரா நாடுகளுக்குத் தலைமையேற்று அமெரிக்க – அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கு இணங்க மறுத்தது; தெற்காசியத் துணைக்கண்டப் பகுதியில்இந்திய நாட்டின் மேலாதிக்கத்தை நிறுவுவது என இந்திரா காந்தியின் அயலுறவுக் கொள்கைகள் சார்ந்த அரசியல் தலைமைப் பாத்திரமே, ஈழ விடுதலைக்கு ஆதரவு நல்கும் விதமாக, இந்திய அரசின் அப்போதைய நிலைப்பாட்டைத் தீர்மானித்தது.

இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் காந்தி காலத்தில் 1987இல் யாழ்குடா முடக்கப்பட்டு, அன்றாட வாழ்வே கேள்விக்குறியான சூழலில், உடனடித் தேவையான உணவுக்கும் வழியின்றித் தவித்த மக்களுக்கு, 1987 சூலை 3 அன்று இந்திய அரசு ராமேஸ்வரத்திலிருந்து உணவுப் பொருட்களைக் கடல் வழியே அனுப்பி வைத்தது. இலங்கை அரசு அக்கப்பல்களை அனுமதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பியது. ஆனால், இந்திய அரசு அடுத்த நாளே விமானங்கள் மூலம் யாழ் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கியது. தனது நாட்டின் எல்லைக்குள் அனுமதியின்றிப் பறந்து, தரையிறங்கிய இந்திய ராணுவத்தை எதிர்க்கும் வலிமை இலங்கை அரசுக்கு அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை!

1961 இந்திய – சீன எல்லைப் போரில், இலங்கை அரசு சீனத்தை ஆதரித்தது. இலங்கை சீனத்தை ஆதரிப்பதற்கான அடித்தளம் பவுத்தமாக இருந்தால், இந்திராவின் இந்தியா ஈழத்தை ஆதரித்ததற்கான அடித்தளம் இந்து மதமாகத்தானே இருக்க முடியும்? ஆனாலும் இந்திராவுக்குப் பிறகு, இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை அரசியல் மற்றும் ஈழ விடுதலை குறித்தான நிலைப்பாடுகளைப் படிப்படியாக மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டது. இந்திரா அளவிற்கு அரசியல் தேர்ச்சியும், சூழ்ச்சியுமற்ற அவரது புதல்வர் ராஜிவ் காந்தி, இந்திய ஆளும் வர்க்கத்தின் உயர் அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட, "கார்ப்பொரேட்' நிறுவனமொன்றின் தலைமை இயக்குநர் போலவே செயல்பட நேர்ந்தது. இயல்பிலேயே தமிழ்த் தேசிய அரசியலால் வெறுப்புற்றிருந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவைக் கை கழுவி, இலங்கை அரசையும் போராளிக் குழுக்களையும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கும்படி ராஜிவுக்கு ஆலோசனை கூறினர்.

இப்பின்னணியில் தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான வடக்கு – கிழக்குப் பகுதிகளை அங்கீகரிக்கவும், அதிகாரப் பரவலுடன் சம உரிமைகளுக்கு வழி வகுக்க வும் இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்தை முன்மொழிந்து, 1987இல் ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், இலங்கை அரசு மற்றும் ஈழப் போராளிகளுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் எனக் காரணங்கள் பூசப்பட்டு, "அமைதிப்படை' என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர் வாழிடங்களில் அத்துமீறி அம்மக்களை அழித்தொழித்து, ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படையின் உளவுப் பிரிவில் உயரதிகாரியாகப் பணியாற்றிய கர்னல் ஹரிஹரன், "த சண்டே இந்தியன்' வார இதழுக்கு, அளித்த நேர்காணலில் (25।1।09), ""ராஜிவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து, 15.9.1987 அன்று விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான திலீபன், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியபோது, இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களைப் புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினர். ஆனால் புது டில்லி இந்த சிக்கலைக் கையாளும் பொறுப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. இறுதியாக செப்டம்பர் 26, 1987இல் திலீபன் மரணமடைந்த போது, புலிகளுக்கும் இந்தியப் படையினருக்குமான உறவு மேலும் கசப்படைந்தது'' எனக் கூறியிருக்கிறார். இது, ஈழத் தமிழர் நலனில் இந்திய அரசுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருந்த அக்கறையின்மையையும், இந்திய "அமைதிப் படை'யின் நோக்கத்தையும் அம்பலப்படுத்துவதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், இலங்கை ராணுவத்தின் அத்தனை பாசிசக் கழிசடைத்தனங்களை இந்திய ராணுவமும் செய்தது. இதன் விளைவாக, அவர்களை விடுதலைப் புலிகள் நேர் நின்று எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்திய ராணுவத்தைச் சிலபோராளிக் குழுக்கள் ஆதரித்து நின்றாலும், இந்திய ராணுவம் தன் "யோக்கியதை'யையும் படை வலிமையையும் இழந்து, இலங்கையிலிருந்து பெருத்த அவமானத்துடன் நாடு திரும்பியது.

இதன் பின்னர் 13ஆவது சட்டத்திருத்தம் உள்ளிட்ட ராஜிவ்–ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை உச்ச நீதிமன்றம் தடைசெய்துவிட்டது. 1991 மே 21 அன்று ராஜிவ் காந்தி தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது கொல்லப்பட்டார். இக்கொலையின் புலனாய்வுக்குப் பிறகு, குற்றம் சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஈழ விடுதலைக்கு வீதியில் இறங்கிப் போரõடிய தமிழக மக்களின் மனங்களில் அச்சமும் அந்நியத் தன்மையும் குடி கொண்டன. இதன் பின்னணியில் ஈழ விடுதலைக்கு எதிரான தம் விருப்பங்களுக்கேற்ப, இந்திய ஊடகங்கள் – நடுவண் உளவுப் பிரிவு – அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது பார்ப்பன ஆளும் வர்க்கம்; அல்லது மேற்சொன்னவற்றின் துணையோடு, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் திரைமறைவுத் திட்டங்களினூடே ஒழிக்கவும் இன்றுவரை முயன்று வருகிறது எனலாம்.

அறிவியல் தொழில் நுட்பமும், முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடுகளும் ஒருங்கே கைகோத்தபோது, அமெரிக்க – அய்ரோப்பிய நாடுகள் தம் அரசியல் மேலாதிக்கத்திற்கும் பொருளியல் சுரண்டலுக்கும் புதிய பாதைகளைக் கண்டறிந்தன. இதன் முதற்கட்டமாக, உலக வர்த்தகக் கழகமும், பன்னாட்டு நிதியமும் உலக முதலாளிகளுக்கு வகுத்துத் தந்த திட்டம்தான் "டங்கல் – காட் ஒப்பந்தம்'. உற்பத்தித் திறனிலும் மூலதனத் திரட்டலிலும் பின்தங்கி, பொருளாதாரத் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியா போன்ற வளர்முக நாடுகளைத் தம் கைப்பிடிக்குள் சிக்க வைக்க, இத்திட்டம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரிதும் உதவியது. உலக அரங்கில் முதலாளித்துவப் பெருமிதங்களின் அடையாளங்களில், தாமும் தன்னால் வழிநடத்தப்படும் இந்தியாவும் இடம் பெற வேண்டும் என்ற ராஜிவ் மற்றும் அவரை உயர்த்திப் பிடித்த இந்தியத் தரகு முதலாளிகளின் கனவு, இயக்கப் போக்கில் இத்திட்டங்களை வரித்துக் கொள்வதில் நிலைத்தன. இந்தியாவின் "இளம் தலைவர்' எனக் கொண்டாடப்பட்ட ராஜிவ், புதிய பொருளாதாரக் கொள்கைகளை இந்திய உற்பத்தித் துறைக்கும், சந்தைக்கும் அறிமுகப்படுத்தினார்.

உலக வங்கியின் அறிவுத் துறை தரகர்களாகப் பயிற்சி பெற்ற, மன்மோகன் சிங்கும் ப. சிதம்பரமும் ராஜிவ் காந்தியின் கரங்களாகச் செயல்பட்டனர். இந்தியாவின் நட்பு நாடாக விளங்கிய சோவியத் ரஷ்யா கெடுவாய்ப்பாக, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு நாட்டைத் திறந்துவிட, தாராளவாத நெகிழ்வுத் தன்மையில் உடைந்து நொறுங்கி, சர்வதேச அதிகார பலத்தை இழந்தது. உலக அரசியல் – பொருளியல் – ராணுவ மேலாதிக்கத்திற்குத் தலைமை தாங்க, அமெரிக்கா போட்டியின்றித் தேர்வானது. சோவியத் ரஷ்யாவின் தோழமை நாடு என்ற பிம்பம் மெல்ல மறைந்து, அமெரிக்காவின் தீவிர ஆதரவு நாடுகளில் ஒன்றாக, இந்தியா தனது அடையாளத்தைப் பேணி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தனது பொருளாதார நலன்களுக்காக அமெரிக்கா, இந்தியாவின் முகத்தைப் புனரமைப்பது போல, இந்தியாவும் இலங்கையின் முகத்தை தன்னுடைய மேலாதிக்க நலன்களுக்கேற்பவே புனரமைக்க விரும்புகிறது. இலங்கையின் நெல் உற்பத்தியில் மூன்றிலொரு பங்கும், மீன்பிடித் தொழிலில் 90 சதவிகிதமும், கடல்சார் ஏற்றுமதியில் பெரும்பங்கும் ஈழத்தைச் சார்ந்தே இருந்ததும், மொழி வழி தேசிய இனமாக இந்தியாவோடு தொடர்பு கொண்டிருந்ததும், நவீனத் தொழிற்நுட்பம் வளர்ச்சியடையாத இந்திரா காலத்து இந்தியாவுக்கு சாதகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய தாராளவாத முதலாளித்துவக் கோட்பாடுகள் – பரந்துபட்ட சந்தையையும், மூலதன வளர்ச்சிக்கான திறன்மிக்க (உற்பத்தி சக்திகளை) மனித ஆற்றல்களையுமே முதன்மையாகக் கோருகின்றன.

15.2.2009 அன்று, சென்னையில் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் பேசிய சிங்களப் பத்திரிகையாளரும் இடதுசாரியுமான சிறீதுங்க ஜெயசூர்யா, ""உலகம் முழுவதும் பிரபலமான இலங்கைத் தேயிலை என்பது, உண்மையில் "சிலோன் டீ' அல்ல; அது "டாடா டீ'. இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 60 சதவிகிதம் "டாடா' குழுமத்திற்கே சொந்தமானது. மேலும், இலங்கையின் எந்திரத் தொழில்துறையும் ஊர்திச் சந்தையும் கூட அசோக் லேலண்ட், பஜாஜ்,
டாடா, மகிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன. இந்திய முதலாளிகளின் பரவலான வணிகச் சந்தைக்கும், நீண்டகால வர்த்தகத்திற்கும் ஒன்றுபட்ட இலங்கையே முக்கியமானது'' என்று குறிப்பிட்டதும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

மிக அண்மையில் கூட, ராஜபக்சேவின் தொழில் நுட்ப ஆலோசகராக "இன்போசிஸ்' நாராயணமூர்த்தியை இந்திய அரசு நியமித்தது. சில நாட்களுக்குப் பிறகு நாராயணமூர்த்தி அதை ஏற்க மறுத்து விட்டாலும், பின்னாளில் இலங்கையின் தொழில் நுட்ப உள்கட்டுமானங்களை நிர்மாணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் இந்தியாவின் தலையீட்டு உரிமையை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். இப்போதுகூட திரிகோணமலையில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை இந்திய அரசு நிர்மாணித்து, நிர்வகித்து வருகிறது. மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெட்ரோலிய வள ஆய்வுகள் பின்னாளில் குஜராத் எண்ணெய்க் கிணறுகளைப் போல, அம்பானி குழுமத்திற்குத் தாரை வார்க்கப்படலாம். இவ்வகையில் இந்தியாவின் பொருளியல் பயன்கள் ஈழப்பிரச்சனையை ஒருபுறம் அணுக, இன்னொரு புறத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் கேந்திர முக்கியத்துவமாக வினையாற்றுகின்றன. இதையும் ஒரு பார்ப்பன வாக்குமூலத்தின் வழியாகவே இங்கு புரிந்து கொள்வது எளிதாகயிருக்கும்.

"இந்திய – இலங்கை பிரகதி சன்சதியா' என்ற அமைப்பு அண்மையில் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ரவ்னி தாக்கூரும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சேஷாத்ரி சாரியும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய சேஷாத்ரி, ""இலங்கை விவகாரத்தில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவு தராத நாடுகள் இலங்கையும் பூடானும்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையில் நல்ல பயன்பாடு உண்டு. பொருளாதார ஒப்பந்தங்கள் போட நல்ல சூழல் வர வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனத்தில் வைத்துத்தான் முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கும் ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விசயங்கள் முக்கியம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் பலம் பெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிபர் ராஜபக்ஷே ஒரு மிதவாதி. அவர் சாதாரண எம்.பி.யாக இருந்தபோதே, 1999இல் பா.ஜ.க. ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தபோது, டெல்லிக்கு வந்து எங்களைப் பாராட்டி விட்டுச் சென்றார். தமிழ் மாகாணம், சிங்கள மாகாணம் என்பதையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில் மொழிவாரியாகவோ, இனவாரியாகவோ அல்லாமல் சுய அதிகாரம் பெற்ற உள்ளாட்சி (பஞ்சாயத்து ராஜ்) அமைப்புகளை உருவாக்கத் தயாராக இருக்கிறார். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமே, இலங்கைத் தமிழர்களுக்குப் பலன் கிடைக்கும். சிங்கள மக்களை எதிர்த்துத் தமிழர்கள் இலங்கையில் முன்னேற முடியாது'' என சிங்கள இனவாதத்தின் குரலாகவே ("ஜுனியர் விகடன்' பிப்ரவரி.4. 2009) தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பார்ப்பன – இந்துத்துவவாதிகளின் "இந்து ஒற்றுமை' என்பது, இந்தச் சமூகத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கமும் இந்திய அதிகார வர்க்கத்திற்கான முதலாளித்துவ நலனும்தான் என்பதே, சேஷாத்ரி போன்றவர்களின் வாக்குமூலத்திலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மையாகும். ஆனால், தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசியவாதிகளோ பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் என இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அண்டை நாடுகள் இருக்கும் சூழலில், தமிழீழமே இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும் என இந்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாக உருவாக்கியதைப் போல, இலங்கையிலிருந்து தமிழீழத்தை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையைப் போல ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையிலும், ஏறக்குறைய 3 லட்சம் கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜுல்பிகார் அலி புட்டோவின் அரசால் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அகதிகளாகக் குடியேறினர். இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபடும் ராஜபக்சே அரசும் கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "ஜனநாயக' அரசுதான்.

வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உருது மொழியே, கல்வி – நிர்வாகம் – ஆட்சியதிகாரம் ஆகியவற்றின் மொழியாக இருக்கும் என பாகிஸ்தான் அரசு செயல்படுத்த முனைந்ததே, அம்மக்களைப் பெரும் கிளர்ச்சியில் இறங்கத் தூண்டியது. டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வெறியர்கள், ஒட்டுமொத்த மாணவியர்களையும் கடத்திச் சென்று வன்புணர்ச்சியில் சீரழித்த கொடுமை ஒன்றே, பாகிஸ்தானின் ராணுவ பாசிசத்தைப் புரிந்து கொள்ள உதவும். பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற நாளில் மக்களிடம் உரையாற்றியபோது "பாலியல் பலாத்காரத்தில் பாதிப்புக்குள்ளான நம் இளம் பெண்களை மணந்து கொள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்' என முஜிபுர் ரகுமான் கண்ணீரோடு குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர வேண்டும்.

அரசியல் அதிகார வெறிக்கு இந்துத்துவம் இந்தியாவில் பங்களிப்பதைப் போல, இஸ்லாமிய மத அடையாளமோ, உணர்வோ பாகிஸ்தான், பங்களாதேஷ் உறவுக்குப் பயனளிக்கவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த
மக்களையே கொடூரமாகக் கொன்றழித்தும், ராணுவ முகாம்களில் பெண்களை வல்லுறவுகளில் சிதைத்தும் பாகிஸ்தான் ராணுவம் நரவேட்டையாடியதும், இந்தியப் படையெடுப்புக்கு நியாயமான காரணங்களாக சொல்லப்பட்டன। ஆனாலும் பங்களாதேஷை உருவாக்கியது, இந்தியாவிற்கு வெளியே பாகிஸ்தானையும் முஸ்லிம்களையும்பலவீனப்படுத்துவதற்கேயன்றி வேறல்ல.

இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்ற போதிலும், தனி ஈழத்தை உருவாக்க இந்திய அரசு விழையவில்லை। காரணம் வெளிப்படையானது: அப்போதும், இப்போதும் இலங்கைத் தீவின் மீதான மேலாதிக்கத்தால் விளையும் பொருளாதாரப் பயன்கள்। மற்றொன்று, இலங்கையின் இந்து சமூக மேலாதிக்கத்தில் பார்ப்பனர்களின் நேரடிப் பங்கு இல்லாதது. தமது மேலாதிக்கத்திற்கான நேரடிப் பயன்இல்லாதபோது, பார்ப்பனர்கள் சூத்திரர்கள் குறித்தோ, பஞ்சமர்கள் குறித்தோ இந்து எனும் உணர்வில் கவலை கொள்வதில்லை. ஈழ விடுதலைக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், நிராகரித்தும் "இந்து' நாளேடு தொடர்ந்து எழுதி வருவது இவ்வகைப்பட்டதே. ஆக, பார்ப்பன ஆளும் வர்க்கமும் இந்திய முதலாளிகளும் தமக்கான நேரடிப் பயன்பாட்டிலிருந்தே, இந்திய அரசுக்கான உள்விவகார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்திய ஆளும் வர்க்க நலன்களுக்குப் பின்னே அடித்தளமாக இருப்பது, பெரு முதலாளித்துவமா? தரகு முதலாளித்துவமா? என்ற ஒற்றைக் கேள்வியே, இந்தியக் கம்யூனிஸ்டுகளின் விவாதப் பொருளாக இருக்கிறது. தேசிய இனங்களை ஒடுக்கும் "இந்திய தேசியம்' ஒரு கற்பிதமே என முழங்கி வரும் தமிழ்த் தேசியவாதிகள், இக்கற்பிதத்தைக் கட்டமைத்துக் காத்து வரும் கருப்பொருளைக் குறித்துக் குழப்பமான அல்லது வேறுபட்ட வரையறைகளையே முன்வைத்து வருகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கத்தை உருவாக்குவது இந்திய (தரகு/பெரு) முதலாளிகள் எனில், இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது இந்து மதமும், பார்ப்பனிய அரசியலுமே। இந்து மதத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டும், பார்ப்பனிய அரசியலுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டும்தான் – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் – இந்தியப் புரட்சி குறித்தோ, தேசிய இன விடுதலை குறித்தோ ஓயாது "வியாக்யானம்' செய்து வருகின்றனர்। இந்து மத எதிர்ப்பைத் தவிர்த்தும் பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடித்தும், உழைக்கும் மக்களின்அறியாமைக்கு ஊறுவிளைவிக்காமல், தத்தமது புரட்சிகரக் கோட்பாடுகளை வென்றெடுத்து விடலாம் என்ற இவர்களின் செயல்திட்டம் பிழைப்புவாதமாகவே முடிந்து போகும்।

இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பு என்பது சாராம்சத்தில் வர்ணாசிரமத்தையும், சாதி – தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்ப்பது மற்றும் அவற்றை அழித்தொழிப்பது என்ற சமூக, அரசியல் பண்பாட்டுச் செயல் திட்டத்தை முன்வைப்பதுமேயாகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பார்ப்பனத் தலைமையில் இயங்குகின்றன; அதனால் அவர்களுக்கு இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பில் அக்கறையில்லை எனவும், இந்தியத் தேசியத்தின் கருத்தியல் அடித்தளமே இந்துத்துவம்தான் எனவும் குற்றம் சுமத்தும் தமிழ்த் தேசியவாதிகள், இந்துமத – பார்ப்பனிய எதிர்ப்பைச் செயலாக்குவது தமது புரட்சிகர வாய்ச்சொற்களில் மட்டுமே!

வறட்டுச் சூத்திர நாத்திகவாதமாகவும், மிகைப்படுத்தப்பட்ட இந்துமத – பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரமாகவும் திராவிட இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது எனக் குறைகூறி, திராவிட தேசிய(?)த்திற்கு மாற்றாகப் பரிணமித்த தமிழ்த்தேசியவாதிகள், இந்து மத – பார்ப்பனிய எதிர்ப்பை ஏறத்தாழக் கைகழுவிவிட்டனர் என்றும், அவர்களின் கருத்தியல் அடித்தளமாக சைவ சிந்தாந்த நெறிகளே இயங்குகின்றன என்றும் குற்றம் சாட்டலாம். பார்ப்பன வேத மத மறுப்பில் சைவ சிந்தாந்த நெறிகள் வளர்ந்தன என்றாலும், சைவ – வைணவக் கலவியில் செழித்ததே இந்து மதமும் பார்ப்பனிய தர்மங்களும். இதனைப் புரிந்து கொண்டால், தமிழீழ விடுதலையை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் பிற்போக்குத் தன்மையையும், நவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

– அடுத்த இதழிலும்



அழிக்கப்படும் இலங்கை ஊடகங்களின் உரிமைகள்

யாழ்ப்பாணத்தில் 1981இல் "ஈழ நாடு' பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதில் தொடங்கி, 1987இல் இந்திய ராணுவம் "அமைதிப்படை' என்ற பெயரில் அட்டூழியங்கள் நிகழ்த்திய காலத்தில், யாழ்ப்பாணத்தில் "சாட்டர்டே ரிவ்யூ' வார இதழ் அலுவலகத்தில் குண்டு வீசியது; இந்திய ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலில் "ஈழமுரசு', "முரசொலி' ஆகிய பத்திரிகைகளின் அலுவலகங்களைத் தகர்த்தது மட்டுமின்றி, ரிச்சர்ட் பி கொய்சா (1990), "சரிநிகர்' செய்தியாளர் குருமூர்த்தி (1990), யாழ் பத்திரிகையாளர் நிமல்ராஜன் (2000, அக்டோபர்), "வீரகேசரி' செய்தியாளர் அய்யாத்துரை நடேசன் (மே, 2004), "தமிழ் நெட்'

ஆசிரியர் தர்மரத்னம் சிவராம் (ஏப்ரல், 2005), சுப்பிரமணியம் சுகிர்தராஜன் மற்றும் சிங்களப் பத்திரிகையாளர் சம்பத் லக்மால் (சனவரி, 2006), சரிநிகர் ஆசிரியர் சந்திரபோஸ் சுதாகர் (2007), யாழ் செய்தியாளர் ரஜிவர்மன் (ஏப்ரல், 2007), யாழ் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் பரநிரூபசிங்கம் தேவகுமார் (மே, 2008), யாழ் "நமது ஈழ நாடு' ஊழியர் சிவமகா ராஜா (ஆகஸ்ட், 2006) மற்றும் "தினமுரசு'ஆசிரியர் அற்புதராஜா நடராஜா, வானொலிக் கலைஞர் கணேசபிள்ளை, கே.எஸ். ராஜா, அன்ரனி ஜேசுதாசன், ரேலங்கி செல்வராஜா, பாலநடராஜ அய்யர் என இன்றுவரை – ஈழ விடுதலைப் போராட்டச் சூழலில் படுகொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது...

Friday, March 27, 2009

ஈழம் - குருதியில் பூக்கும் நிலம்


“இறுதியாக நான் கொல்லப்படும்போது அரசாங்கம்தான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். எனது மரணம் சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படக் கூடாது என்று நான் விரும்புகிறேன். தனி மனித விடுதலைக்கான ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதற்கான சக்திகளை எனது மரணம் திரட்டும் என்று நான் நம்புகிறேன். இப்போது நாம் பேசவில்லையென்றால், பேச முடியாதவர்களுக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்.''

– லசந்த விக்ரமதுங்க,

"தி சண்டே லீடர்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்த லசந்த விக்ரமதுங்க, 8.1.2009 அன்று காலை தன் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் இலங்கை அரசப்படையின் ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

“என் உடலைக் காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.''

– முத்துக்குமார்,

Eelam women "பெண்ணே நீ' என்ற வார இதழில் கணினி தட்டச்சு ஊழியராகவும் திரைத்துறையில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்த முத்துக்குமார், சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் 29.1.2009 அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் நீத்தார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, எதேச்சதிகாரமாய் இலங்கை அரசு ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடத் தொடங்கி, அதற்குப் பதிலடியாய் அநுராதபுரம் ராணுவ விமானத் தளத்தை விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் கடந்த அக்டோபர் 22, 2007 அன்று முற்றுகையிட்டு, பெரும் சேதத்தை ஏற்படுத்திய பிறகு, இலங்கை ராணுவத்தின் பயங்கரவாத வியூகம் தீவிரத் தன்மையடைந்தது. நார்வே அரசின் சமாதானத் தூதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு (இலங்கை அரசாலும்), விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளராக செயற்பட்டு வந்த, சு.ப. தமிழ்ச்செல்வனின் படுகொலையை ஒட்டியே, தமிழகத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டனக் குரல்களும், ஈழ ஆதரவுப் போராட்டங்களும் மீண்டும் எழத் தொடங்கின. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வருக்கும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சர்வதேச மனிதாபிமானத்தின் ஊற்றுக் கண்களைத் திறக்க தமிழ்ச்செல்வனின் படுகொலையும், இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனங்களை வலுப்படுத்த, சிங்களப் பத்திரிகையாளரான லசந்தாவின் படுகொலையும், ஈழ மக்களுக்கு ஆதரவான குரல்களை ஒருங்கிணைக்க முத்துக்குமாரின் (தற்)கொலையும் பெரிதும் உதவியதில் முக்கியத்துவம் பெற்றன. இம்மூவரையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நடுவில் வரலாற்றுத் தேவைகளாக எழுந்த பரப்புரையாளர்களாக, இறுதிப் போரென வர்ணிக்கப்படும் இக்காலகட்டத்தில் குறிப்பது அவசியமெனப்படுகிறது.

இலங்கையில் இன விடுதலை அரசியலானது, படுகொலைகளின் ஊடாகவே தன் வரலாற்றை எழுதிச் செல்கிறது; அல்லது படுகொலைகளின் வரலாறாகவே பதிவு செய்யப்படுகிறது. உலகின் அனைத்து வரலாறும் படுகொலைகளின் வழியாகவே ரத்தத்தால் எழுதப்பட்டவை தாம் என்ற புரிதல் இருந்த போதிலும், இலங்கை இனப்படுகொலை அல்லது விடுதலைப் போராட்டமானது, நம் சமகாலத்தின் வரலாறாக இருப்பதால் நாம் பங்கேற்பாளராகவோ, பார்வையாளராகவோ இடம்பெற வேண்டியது கட்டாயமாகிறது. அதிலும் மொழி, இனம், சாதி என்ற அடித்தளத்தில் வேறு எவரையும் விட இந்தியத் தமிழராகிய நாம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இணைப் பயணிகளாக இருக்க வேண்டிய நெருக்கடியில், மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்நெருக்கடியைச் சமாளிக்க வரலாற்றை ஆய்வு செய்வது இங்கு அவசியமாகிறது.

தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ நிர்பந்திக்கும் சிங்கள இனவெறியர்கள், தம்மை மட்டுமே இலங்கைத் தீவின் தொல்குடியினர் என கருதிக் கொள்கின்றனர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தின் இன்றைய ஒரிசா பகுதியிலிருந்து "விஜயன்' என்ற ஆரிய இன வழிவந்த மன்னன், தம் படையினரோடு இலங்கையில் குடியேறியதைக் குறிக்கும் வகையில், 1983ஆம் ஆண்டு அவனது வருகையின் 2500 ஆம் ஆண்டு நிறைவு அஞ்சல் தலையை இலங்கை அரசு வெளியிட்டது. விஜயனைத் தம் மூதாதையனாக ஏற்றுக் கொண்டுள்ள சிங்கள இனம், இந்தியாவிலிருந்து பின்னர் இறக்குமதி செய்து கொண்ட பெருஞ்செல்வமாக பவுத்தம் இருக்கிறது. ஆனால் ஈனயானம், மகாயானம் என ஆரியர்களால் ஊனமாக்கப்பட்டதைப் போலவே, இலங்கையிலும் பவுத்த நெறி ஊனமாக்கப்பட்டு, இன்று மரணப் படுக்கையில் வீழ்ந்துள்ளது. சிங்களம் பவுத்தத்தை இறக்குமதி செய்து கொண்டது எனில், தமிழர்கள் தமக்கென பெரும் கேடாய் இந்து மதத்தைத் தருவித்துக் கொண்டனர் என்றால் மிகையல்ல.

சிங்கள மன்னர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் இடையிலான ஆயிரமாண்டுகாலப் போர்களின் தொடர்ச்சியில், அய்ரோப்பியர்களின் உலக மேலாதிக்கத்திற்கான படையெடுப்புகளின் வரலாற்றுக்காலம், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவுடனான வணிகத் தொடர்புடன் தொடங்கியது. 1505ஆம் ஆண்டு சிங்களர்களோடு வணிகத் தொடர்பு கொள்ள, போர்ச்சுக்கீசியர்கள் தம்மை எதிர்த்துப் போரிட்ட தமிழ் மன்னன் சங்கிலியனை சிறைப்பிடித்து பின்னர் தூக்கிலிட்டனர். 177 ஆண்டு போர்ச்சுக்கீசியர்களின் காலனி ஆதிக்கத்தை, 1659ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் கண்டி மன்னனோடு வணிக ஒப்பந்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஏறத்தாழ 112 ஆண்டுகள் நிலைப்பெற்றிருந்த டச்சுக்காரர்களின் ஆதிக்கம், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையோடு முற்றுப் பெற்றது. ஆங்கிலேயரைக் கடைசிவரை எதிர்த்துப் போரிட்ட பண்டார வன்னியன், இன்னொரு தமிழ் மன்னனின் காட்டிக் கொடுப்பால் இறுதியில் கொல்லப்பட்டான்.

1833இல் தமிழ் மற்றும் சிங்களப் பகுதிகளை இணைத்து ஆங்கிலேயர் ஒற்றையாட்சியைக் கொண்டு வந்தனர். தமது ஆட்சியதிகாரத்திற்கென கோல்பு×க் ஆணைக்குழு (1833)வை நியமித்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட நிர்வாக மற்றும் சட்ட நிரூபண சபைகளை உருவாக்கிக் கொண்டனர். இக்காலத்திற்குச் சற்று முன்னர்தான் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கையின் மலையக நில வளத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கில ஏகாதிபத்தியம் மலையகப் பயிர்களை அறிமுகப்படுத்த முடிவெடுத்தது. அதற்கென 1800களின் தொடக்கக் காலங்களில் தென் தமிழ் நாட்டிலிருந்து மலையகத்தை மேம்படுத்த, பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழர்கள் இலங்கையிலும் மலேசியாவிலும் குடியமர்த்தப்பட்டனர். பள்ளர், பறையர், முக்குவர், மீனவர், நாடார், வன்னியர், மருத்துவர் மற்றும் குறைந்த அளவில் முக்குலத்தோர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், இம்மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கையில் குடியேற்றப்பட்டனர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் செப்பனிடப்பட்டு, காப்பி, ரப்பர், தேயிலைத் தோட்டங்களும், இத்தொழிலாளர்களின் குடியிருப்புகளும் உருவாகின. இக்காலகட்டங்களில் இத்தோட்டங்களின் கூலி உழைப்புக்காக, இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்த தமிழர்களில் 3 லட்சம் மக்கள் கடல் பயணங்களின் போது – நடுக்கடலில் மூழ்கியும், குடியிருப்புகளில் போதிய மருத்துவமின்றி நோய்களிலும், வேலையிடங்களில் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்ட நச்சுப் பிராணிகளால் தீண்டப்பட்டும் மரணமடைந்திருக்கின்றனர். கடுமையான உடலுழைப்பு ஆற்றல் கொண்ட இம்மக்களைக் கொண்டே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தரைவழிச்சாலை, ரயில்வே இருப்புப்பாதை, பாலங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்கள், ஏரிகள் போன்றவற்றை ஆங்கில ஏகாதிபத்தியம் நிர்மாணித்தது. இன்றைக்கும் இலங்கையின் வருவாயில் 60 சதவிகிதம் வரை ஈட்டித்தரும் தேயிலை, காபி, ரப்பர் ஆகிய தோட்டப் பயிர்களை விளைவித்துத் தருகிற மலையக மக்கள் – இலங்கையின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமலும், தாய்நாடான தமிழகத்தில் தமது வேர்களை இழந்தவர்களாக திரும்பிவர வழியற்றவர்களாகவும் "நாடற்றவர்கள்' என்ற வகையினத்துள் வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடும் சுரண்டலுக்கு ஆட்பட்டு, தமது உரிமைகளுக்குப் போராடிய போதெல்லாம், இன மற்றும் மொழி அடிப்படையில் மலையக மக்களின் துயர் துடைக்க இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் முன்வரவில்லை. மாறாக, இலங்கையிலும் மலேசியாவிலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இத்தமிழர்களைச் சுரண்டிக் கொழுக்க, ஆங்கிலேயர்களுக்குக் கங்காணி வேலையும், கணக்கன் வேலையும் செய்து, தம் வளத்தைப் பெருக்கிக் கொண்ட சாதியினராக, வெள்ளாளர்களும் செட்டியார்களுமே இருந்தனர்.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்குப் பிறகு, மலேசியாவிலும் இலங்கையிலும் இதே மலையகத் தோட்டங்கள் பலவற்றை இச்சாதியினர் தமது உடைமையாக்கிக் கொண்டனர். இத்தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை கொடும் சுரண்டலுக்கு உட்படுத்தியதோடல்லாமல், இம்மக்களின் மீது சாதிய ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். மலையக உழைக்கும் மக்கள் தொழிலாளர்களாக ஒன்றிணைவதைத் தடுக்க, இம்மக்களிடையே சாதி பாகுபாடுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், இந்துமத மூட ழமைகளையும் வளர்த்தெடுத்தனர். மேலும் சிறுவணிகம், வட்டித் தொழில், கொத்தடிமைத் தரகு ஆகியவற்றிலும் பெருஞ்செல்வம் சேர்த்தனர்.

மலேசியாவிலும், இலங்கையிலும் ஒன்றுமறியா மக்களின் உழைப்பில் கொள்ளையடிக்கப்பட்ட இப்பெரும் பணத்தைத் தான், தமிழகத்தின் விளைநிலங்களிலும் வட்டிக் கடை, நகைக்கடை, வளர்ந்து வரும் தொழில்கள் ஆகியவற்றிலும் மூலதனமாக்கி, இந்திய – தமிழக அதிகார வர்க்கத்தின் மய்யங்களாகத் தம்மை நிறுவிக் கொண்டனர். ஆயிரம் ஜன்னல் வீடு, பழமையின் எச்சம், பழந்தமிழர் அடையாளம் என்றெல்லாம் பெருமை பாராட்டப்படும் "செட்டிநாடு' வீடுகள் சுட்ட செங்கற்களாலும், பர்மா தேக்கு மரங்களாலும் கட்டப்பட்டவை அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் குருதியாலும் சதையாலும் கண்ணீர் பிசைந்து நிர்மாணிக்கப்பட்டவை. குடியிருக்கக் குடிசை இல்லõத மக்கள் நடுவில் கொழுப்பெடுத்த சாதித் திமிரைப் பறைசாற்ற, மாட மாளிகைகளை வீடுகளெனக் கட்டி வாழும் செட்டி நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்கள் எனில், வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் உண்டு செரித்து இளைப்பாறும் "தமிழ்த் தேசியம்' – ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயிரமாண்டு கால அவலம் அன்றி வேறென்ன?

1883இல் புத்தளம் முதல் கண்டி வரையான இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழ்ந்த மேற்குப் பகுதியும் தொல்குடி தமிழர்கள் வாழ்ந்த வடக்கு – கிழக்குப் பகுதிகளும் சிங்களர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த தென் இலங்கையும் ஆங்கிலேய காலனி ஆட்சியின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டன. இந்தியாவில் 526 சமஸ்தானங்களும் பல்வேறு பிரதேசங்களும் இணைக்கப்பட்டு, ஒரே நாடென ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டது போலவே, இலங்கையின் அதிகார அமைப்பும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1880இல் கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் கத்தோலிக்கர்களுக்கும் பவுத்தர்களுக்கும் இடையே மூண்ட மதக் கலவரத்தில் சிங்கள மற்றும் தமிழ் கிறித்துவர்கள் மத அடையாளம் வழி இணைந்தே இருந்தனர்.

இந்நிலையில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான தேச உணர்வு இந்தியாவைப் போலவே, இலங்கையிலும் முகிழ்த்தது. ஆனால், அவ்வுணர்வு பிரித்தானிய பிரித்தாளும் சூழ்ச்சியில் நாளடைவில் இந்தியாவில் இந்து – முஸ்லிம் என வகைப்படுத்தப்பட்டது போல, தமிழர் – சிங்களர் எனப் பிளவுண்டது. ஆனால், இப்பிளவிற்கு இருவேறு தேசிய இனமாக தமிழர்களும் சிங்களர்களும் இருந்ததே அடிப்படைக் காரணமாகவும் இருந்தது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கையின் சுதந்திரக் கோரிக்கையை வலியுறுத்தி தொடங்கப்பட்டது. பொன்னம்பலம் அருணாச்சலம் என்ற தமிழரே அதன் முதல் தலைவரானார். 1920 இல் வழங்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின்படி, சட்ட சபையில் 13 சிங்களர், 3 தமிழர் என பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைமைக்குள் முரண்பாடுகள் எழுந்து, பொன்னம்பலம் அருணாச்சலம் வெளியேறினார். இதனைத் தொடர்ந்தே, தமிழர்களின் உரிமைகளைப் பேசுவதற்கான அவசியத்தில் "தமிழர் மகாசனசபை' உருவாக்கப்பட்டது. 1931இல் வயது வந்தோர் அனைருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1927–1931 காலகட்டத்தில் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட டெனாமூர் ஆணைக்குழு, தமிழர்கள் முன்வைத்த விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1944இல் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதே ஆண்டில் சோல்பரி பிரபு தலைமையில் பிரித்தானிய அரசுக் குழு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்து இரு தரப்பினரையும் சந்தித்து. “இலங்கையில் ஆட்சியுரிமை இருபெரும் மொழிவழி சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சம குடியுரிமை பெற்றவர்களாக வாழ்வதையே தமிழர்கள் விரும்புகின்றனர்'' என பொன்னம்பலம் தலைமையில் தமிழர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் 1945 அக்டோபர் 9இல் சோல்வரி ஆணைக்குழு, இலங்கைக்கு ஒற்றையாட்சியைப் பரிந்துரைத்துச் சென்றது. எவ்வித சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்படாத நிலையில் 1948 பிப்ரவரி 4இல் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் இலங்கையின் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் கையளிக்கப்பட்டது.

Eelam women உடனடியாக, 15.11.1948 அன்று பத்து லட்சம் மலையக மக்களும் இலங்கையின் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 1953 இல் நடந்த ஆளும் கட்சியான அய்க்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் தமிழும் சிங்களமும் ஆட்சி மொழியாக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது. 1954இல் இலங்கையின் பிரதமராகயிருந்த ஜான் கொத்தலவலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உரையாற்றும் போதும், மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கியதிலிருந்து இதே தீர்மானத்தை வலியுறுத்தி வந்த பண்டாரநாயகா, தமது வாக்குறுதியைக் கை கழுவிவிட்டு 5.6.1956இல் சிங்களமே ஒரே ஆட்சி மொழி என சட்டம் இயற்றினார். 22.5.1972இல் பவுத்தமே முகாமை பெற்ற அரச மதமாகவும் நடைமுறைக்கு வந்தது. சிங்களர்கள் மொழி வழியாகவும், மத அடிப்படையிலும் ஒன்றிணைக்கப்பட்டனர். ஆனால் தமிழர்கள் பூர்வீக ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என வரலாற்றுக் காலம், வாழிடம், பின்பற்றும் மதம் எனும் வகைப்பாடுகளில் பிரிந்தே நின்றனர். மொழி, தமிழர்களை ஒன்றிணைக்கவில்லை.

இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களிடையே இன வேறுபாடுகளைக் கடந்து அவர்களை உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்டும் நோக்கத்தோடு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஈழத்திலும் மலையகத்திலும் காலூன்றியது. உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களே அணி திரண்டனர். இத்தகைய அணி திரட்டல் இயல்பிலேயே, தமிழர்களிடையே சாதி – தீண்டாமைகளுக்கு எதிராகவும், ஆதிக்கச் சாதித் தமிழர்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் கருக் கொண்டது.

கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்டவர்களின் – தீண்டத்தகாத மக்களின் கட்சியென ஆதிக்க சாதியினரால் பிரச்சாரம் செய்யப்பட்டு, கட்சியின் ஊழியர்கள் தாக்கப்படுவதும் சில நேரங்களில் கொல்லப்படுவதும் நடந்தது. 1950 – 1970களுக்கு இடைப்பட்ட ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளால் நிகழ்த்தப்பட்ட சாதி எதிர்ப்பு – தீண்டாமை ஓழிப்புப் போராட்டங்களுக்கான வரலாறும் முதன்மையானதாகவே இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும். இலங்கையின் தமிழ்ச் சமூகத் தலைமைப் பாத்திரத்தை அரசியல் – பொருளியல் அம்சங்களில் வகித்து வந்தவர்கள் (சைவ) வேளாளர்களே. தமிழகத்தில் பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகத் தொடங்கி, பின்னாளில் வேளாள சாதியினரின் அரசியல் தலைமையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் 1949 செப்டம்பரில் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதே காலத்தில்தான் 1949 டிசம்பரில் தந்தை செல்வாவால் தமிழரசுக் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது. மொழியை முன்னிறுத்தி, தமிழர்களை ஒன்றிணைக்கவும், தமது சமூக – அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேளாளர்கள், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்கினர். தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி, சைவத் தமிழ் அறிஞர்கள் 1800களின் நடுவிலிருந்தே இந்து மத வளர்ச்சியையும் தமிழை செம்மொழியாகத் தரப்படுத்துவதையும் இணைத்தே செய்து வந்தனர்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு சைவத் தமிழ் கருத்துருவாக்கம் அரசியல் எழுச்சிக்காக, தேசியக் கோட்பாடாக முன்மொழியப்பட்டபோது – "மதநீக்கம்' செய்யப்படாததாகவே இருந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் தலைமையில் இந்துமத எதிர்ப்புப் பணிகள் நடைமுறையில் இருந்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கருத்தாடல் முற்றாக மதநீக்கம் செய்யப்படாவிட்டாலும், நடைமுறையில் இந்து மதத்திலிருந்து விலகி நின்றது. ஆனால், ஈழத்திலோ சைவத் தமிழ்த் தேசியம் அரசியல் ரீதியாக, இன்னும் மேன்மைப்படுத்தப்பட்ட – இந்துமயமாக்கப்பட்ட கருத்துருவமாகவும் கோட்பாடாகவுமே முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியல் கோட்பாட்டில் "மதநீக்கம்' செய்வதும் பகுத்தறிவுவாதம் முன்வைக்கப்படுவதும், தமது சமூக மேலாதிக்கத் தலைமைக்குத் தாமே வெட்டிக்கொள்ளும் சவக்குழி என்பதை யாழ்ப்பாண வேளாளத் தலைமை உணர்ந்தே இருந்தது. இந்து மதத்தைக் கட்டிக் காப்பதில் பார்ப்பனர்களுக்கு இருக்கும் சமூகப் பதற்றமும், முனைப்பும், பெருவிருப்பும் ஈழத்தில் வேளாளர்களுக்கு இருந்தது. இன்றும் இருக்கிறது.

1956இல் தமிழ் உரிமை மறுப்புச் சட்டத்தை எதிர்த்து, அறப்போராட்டம் நடத்தக் கூடியிருந்த தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் எதிர்பாராதவொரு தாக்குதலை நிகழ்த்தியதன் விளைவாக ஏறத்தாழ 150 தமிழர்கள் பலியாயினர். 26.7.1957இல் பண்டாரநாயக – செல்வா ஒப்பந்தமும் 24.3.1965இல் டட்லி சேனநாயக – செல்வா ஒப்பந்தமும் தமிழர் உரிமைகளை முன்மொழிந்து போடப்பட்டன. 1972இல் சிறீமாவோ பண்டார நாயக ஆட்சிக் காலத்தில் சிங்கள பவுத்தர்கள் மட்டுமே இலங்கையின் அதிபராக முடியும் என குடியரசுச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சிங்களவர்களை விட, படித்தவர்களாகவும் அரசுப் பணிகளில் இருப்பவர்களாகவும் தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதை முடக்கும் விதமாக, கல்வியைத் தரப்படுத்துதல் என்ற போர்வையில் சிங்களர்களுக்கு மதிப்பெண் சலுகைகளும் பாடத் திட்ட முறைகளில் மாற்றமும் சிங்கள மொழிக்கு முக்கியத்துவமும் தரப்பட்டன.

இதற்கிடையில் 1964இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக, இந்தியப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், மூன்றில் ஒரு பங்கினரின் வாழ்க்கைக்கு மட்டுமே உத்திரவாதம் அளித்தது. ஏனையோர் மூன்றாம் தரக் குடிமக்களாகவே மலையகத்தில் இருத்தப்பட்டுள்ளனர். இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து தமிழக மலைக் கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர், கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள குண்டுப்பட்டி என்ற ஊரில் வாழ்கின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மலையக மக்கள் சாலை வசதி கேட்டு "தேர்தல் புறக்கணிப்பு' செய்தார்கள் என்ற காரணத்தினால், 1997இல் வேளாள – சாதி இந்துக் கட்சியான தி.மு.க. தன் குண்டர்களை ஏவி, அம்மக்களின் குடியிருப்பைத் தாக்கி அழித்து, கடும் உழைப்பில் சேகரித்து வைத்திருந்த பொருட்களை நாசமாக்கியும் கொள்ளையடித்தும், இரு அப்பாவிகளைக் கொன்றும் பழி தீர்த்தது.

இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட குண்டர்கள் பலரும் பிழைப்பதற்காக மதுரை உசிலம்பட்டிப் பகுதியிலிருந்து மலையேறி வந்த, குண்டுப்பட்டிக்கு சற்றே தொலைவில் வசித்து வருகிற பிரன்மலைக் கள்ளர் சாதியினரே. இதே போன்றதொரு தாக்குதலும் வன்முறையும் கொடியங்குளம் என்ற ஊரில் இன்னொரு வேளாள – சாதி இந்துக் கட்சியான அ.தி.மு.க. காலத்தில் நிகழ்த்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொல்லப்பட்ட மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் யாவரும், சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட மக்களே. ஆக, ஈழத்திலும் தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்கி காலடியில் வைத்துக் கொண்டுதான், வெள்ளாள – சாதி இந்து தலைமை தமிழ்த் தேசிய கருத்துருவாக்கங்களைச் செய்து வருகிறது। ஆனால், செயற்கையானதொரு தமிழின ஒற்றுமைக்கு அறைகூவும் அரசியல் சூழ்ச்சிக்கு, ஒடுக்கப்பட்ட மக்கள் காலங்காலமாகப் பலியாகி வருவதும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.




தொடரும்......


Monday, March 16, 2009

வன்முறையின் வேர் எது?

வன்முறையின் வேர் எது?

- இளம்பரிதி

ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் வலுப்பெற்று வரும் சூழலில் இக்கவனத்தை திசை மாற்றியது, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அதற்கு மறுநாள், தமிழக சட்டமன்றம் களை கட்டியது. அதற்கு முன்னரே, இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக, உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள காவல் நிலைய அனைத்து மட்ட காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல் துறைக்குப் புதிய ஆணையரும் நியமிக்கப்பட்டார். சட்டக்கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென ஜெயலலிதாவும், வைகோவும் 356 ஆவது முறையாக, புளித்துப் போன பல்லவியையே மீண்டும் பாடினர்.

தரங்கெட்ட திரைப்படங்களின் வரன்முறையற்ற வன்முறைக் காட்சிகளையும் ஆபாச பிம்பங்களையும், ‘சேனல்'களின் கூத்தடிப்புகளையும் தொலைக்காட்சிகளில் அள்ளிப்பருகிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை-ஒப்பனையோ, ஒத்திகையோ இல்லாமல், ஆனால் ஒட்டி வெட்டப்பட்ட சில நிமிட காட்சித் துண்டுகள்-துணுக்குறவோ, திடுக்கிடவோ செய்து விட்டன. ‘ஜெயா' மற்றும் ‘சன்' தொலைக்காட்சிகள் மட்டும் மார்கழி மாதத்து ‘பஜனை' போல, இக்காட்சிகளை தமிழ்ச் சமூகத்தின் ஆபாச நுகர்வுக் கலாச்சாரம் துய்க்கத் துய்க்க தீனியாக்கி வந்தன. “ஈவு இரக்கமற்ற கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. மாணவர்கள் தேர்தலில் கூட, ஜாதி மற்றும் கட்சி வாரியாக மோதல்கள் நடக்கின்றன. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை இனி வேறு எங்குமே கல்வி பயில முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.
law_student
வட மாவட்டங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்கள் மீது வன்னியப் பெருமக்கள் ஈவு இரக்கமற்ற கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும்-நடத்தி வருவதும் ‘சில நிமிட' நேரம் அல்ல; பல்லாயிரக்கணக்கான மணி நேர ஆவணங்களாக, காட்சிகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உதிரத்துள் உறைந்துள்ளதை அவர் அறிவாரா? ஜாதி சங்கத்தையே அரசியல் கட்சியாக நடத்தி வரும் உங்கள் கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பயில வரும் மாணவர்கள் சிலேட்டு, புத்தகங்களுடன் சாதியத்தையும் சுமந்துதானே வருகிறார்கள்!

தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் வன்மத்தையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் இதே அவையில், “இந்த மாணவர்கள் பயின்று வெளியில் வந்தால் நீதியின் நிலை என்னவாகும் என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அரசு அனுமதிக்கக் கூடாது. இவர்களால் நாட்டுக்குக் கேடாகத்தான் அமையும்'' ("தினத்தந்தி', 14.11.2008) என, விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினரும், நாடறிந்த தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமார் எங்ஙனம் பேசத் தளைப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நீதியின் நிலை, நாட்டிற்கு விளையும் கேடு ஆகியன பற்றி அவருக்குத்தான் எவ்வளவு கவலை! காங்கிரஸ்காரர்கள் தோற்றார்கள் போங்கள்! மேலும் அவர் தனது உரையில், “சாதியத் தலைவர்களின் பிறந்த நாள் போன்ற விழாக்களை கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதித் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்கச் சொல்லும் ரவிக்குமார், நெல்லை மண்ணுரிமை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்- ‘தேவர்' பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து- ‘அரிஜன ஆலயப் பிரவேச நாளாகவும் அனுஷ்டிக்கும்படி' அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வரிடம் நேரிலேயே நகல் வழங்கியதை மறந்து விட்டாரா?

அடுத்து, ஜெயக்குமார் (அ.தி.மு.க.) மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இ. கம்யூனிஸ்ட்), ராமக்கிருஷ்ணன் (ம.தி.மு.க), ஞானசேகரன் (காங்கிரஸ்) ஆகியோரும் சட்டமன்றத்தில் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அனைத்துக் கட்சிகளின் ‘சாதி இந்து ஒற்றுமை'யைக் குறிப்பிட மறந்து விடக் கூடாதல்லவா? அது மட்டுமா? தலித்துகள் நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போதும், பாமரர்கள் கை பிசைந்து நிற்கும் போதும்-சவத்தைப் போல உறங்கும் மாநில மனித உரிமை ஆணையம், பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில், தன்னிச்சையாக இந்நிகழ்வை வழக்காக எடுத்துக் கொண்டு, நீதிபதி ஏ.எஸ். வெங்கடாச்சலமூர்த்தி தலைமையிலான "முழு பெஞ்ச்' விசாரணையை மேற்கொண்டுள்ளது. இப்பிரச்சனையின் முழு விவரங்களையும் மாநில காவல் துறைத் தலைவர் இரண்டு வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி, ஆணையத்தின் முன் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென அவருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

poster இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர். காயமடைந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப் பற்றி சட்டமன்ற விவாதத்தின்போது அமைச்சர் துரைமுருகன், “புகார் தரவில்லை என்பதற்காக காவல் துறை வேடிக்கை பார்த்தது குற்றம்தான். ஆனால் யாரும் புகார் தராமலேயே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரு முறை சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து (தலித்) மாணவர்களைக் காட்டுமிராண்டித் தனமாகக் காவல் துறை தாக்கியது'' என நினைவுபடுத்தியபோது, ஜெ-சசிகலா கும்பலின் தேவர் சாதி சார்பு அ.தி.மு.க.வும், அதன் வாலாகிப் போன ம.தி.மு.க.வும் கூச்சலிட்டு "அவை' வெளிநடப்பு செய்தன.

“இக்கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். இது போன்ற வன்முறைக் காட்சிகள், மக்களின் மனநிலையை மேலும் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். ஏற்கனவே இந்த அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எந்தக் கதியை அடைந்தனவோ, அதே கதியைத் தான் இதுவும் அடையப் போகிறது'' என அறிக்கை ("தினத்தந்தி' 14.11.08) விடுத்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் மனநிலை பாதிக்க வேண்டும்-சாதி வன்மம் தலை தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொலைக்காட்சியில் தொடர்ந்து இக்காட்சிகளை ஒளிபரப்பச் சொல்லி விட்டு, தனது அறிக்கையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறது இப்பாசிச பூதம்.

சட்டப்பூர்வ நியாயங்களுக்காக நாம் விசாரணை ஆணையங்களை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், நீதி விசாரணை தொடங்கப்படும் முன்பாகவே, இந்தப் பிரச்சனைக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தை ஜெயலலிதா நிராகரித்து விட்டதை, நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த விசாரணை ஆணையம் அரசுத் தரப்பையோ, காவல் துறையையோ காப்பாற்ற முயலலாம். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக அது ஒருபோதும் அறிக்கை தரப்போவதில்லை. இருந்தும் இந்த ஆணையத்தை ஜெயலலிதா நிராகரிக்க வேண்டிய நோக்கம் என்ன?

இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களை இயக்கி வரும் "தேவர்' சாதி பின்புலமும், அதற்கு ஊக்கமளித்து வரும் ஜெ–சசிகலா ஆதிக்க சாதி வெறிக் கும்பலின் அரசியலும் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற பதற்றமே. ஆனாலும், இது ஊரறிந்த ரகசியம் தானே? இந்த அரசின் விசாரணை ஆணையங்களின் மீது நம்பிக்கை இல்லாத அவர், மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்த மறியலின்போது இ. கோட்டைப்பட்டி தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையத்தை நிராகரிக்க மாட்டார். காரணம் வெளிப்படையானது. இப்பிரச்சனை காவல் துறை (அரசு)க்கும் தலித் மக்களுக்கும் இடையிலானது. விசாரணை அறிக்கை யாரைக் குற்றம் சாட்டினாலும் அரசியல் லாபம், வஞ்சக இன்பம் என ஜெயலலிதாவுக்குக் கிடைப்பதோ இரட்டைக் கனிகள்.

“தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும், உள்நோக்கம் கொண்ட வகுப்பவாத பிற்போக்கு சக்திகளின் பின்னணி மற்றும் சதி முயற்சி பற்றியும் தமிழக அரசு விசாரித்து அறிவிக்க வேண்டும்'' என, கடந்த காலத்தில் "கை' சின்னத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகிய தா. பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அறிக்கை விடுத்தார். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் பிள்ளை சாதியினருக்குப் பின்னிருந்து வன்முறைகளை ஏவியும், சாதிக் கலவரத்தைத் தூண்டியும் வருகிற தா. பாண்டியனின் உறவுக்கார உசிலம்பட்டி கள்ளர்களின் பிற்போக்கு நடவடிக்கைகள், சதி முயற்சிகள் பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அவர் அறிக்கை தருவாரா? இவரது கட்சியைச் சேர்ந்த சிவ புண்ணியமும் சட்ட மன்றத்தில், “திட்டமிட்டு நடந்த சம்பவமோ என்ற அச்சம் ஏற்படுகிறது'' என பயம் கொள்கிறார். வர்ணாசிரம தத்துவமும், பார்ப்பனிய அரசியலும், ஆதிக்க சாதி மனநிலையும் அன்றி, இதில் பின்னணி-சதித்திட்டம் பற்றி ஆராய என்ன "எழவு' இருக்கிறது?

poster ‘ஓட்டுப் பொறுக்கி'களுக்குத் ‘தேவை'யிருக்கலாம். ஆனால் உலக ‘வியாக்யானம்' செய்கிற அறிவுஜீவிகளும் தங்களுக்கிடையிலான மாச்சரியங்களை விடுத்து கைகோத்து வருகின்றனர். ‘குமுதம்' ‘ஓ' பக்கங்கள் ஞாநியும், பா.ஜ.க.வின் எச். ராஜாவும் இன்னொரு அ.தி.மு.க. பிரமுகரும் உடனிருக்க, ஜெயா தொலைக்காட்சியில் "உலக அறிவாளி' ரபி பெர்னார்ட் உடன் இப்பிரச்சனைக்காக உரையாடி மகிழ்ந்தனர். காவல் துறையின் நம்பகத் தன்மை-மேலாண்மை-புனிதத்துவம் என இவர்கள் பேசப்பேச புல்லரித்துத்தான் போனது. “காவல் துறையை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும்'' என ஞானி, அரசுக்கு ஆலோசனை சொன்னார். பெரியாரிய முகமூடி இட்டுக் கொண்ட நாத்திகப் பார்ப்பனர் ஞாநியும், பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்' என்றே மேடைகளில் எப்பொழுதும் விளிக்கும் ஆத்திகப் பார்ப்பனர் எச். ராஜாவும்-ஒருவரையொருவர் கட்டித் தழுவாத குறையாக, இப்பிரச்சனை குறித்தான "ஜெயா' (16.11.08) விவாதத்தில் கூடிக் குலவினர்.

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஏறத்தாழ காவல் துறை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாகவே இயங்கும். அதையே சட்டப்பூர்வமாக்கச் சொல்கிறார் ஞாநி. காலனிய ஆதிக்கத்திற்குப் பிந்øதய காலங்களில் நிகழ்த்தப்பட்ட சரிபாதியளவு அரசு வன்கொடுமைகளுக்கு கருவியாகச் செயல்பட்டதும் இதே காவல் துறைதான். எம்.ஜி.ஆர். காலத்திய அரசியலும், அப்போது காவலர் தேர்வுத் துறையில் அய்.ஜி.யாகப் பணியாற்றி பின்னாளில் ‘தேவர் பேரவை'யை நிறுவியவருமான பொன். பரமகுரு, தன் பதவிக் காலத்தில் தன் சாதியினரைப் பெருமளவில் காவல் துறைக்குள் நுழைத்தார். அதன் பிறகே சாதி இந்துக்களின் வன்மத் துறையாக அது உருமாறி-தலித்துகளையும், முஸ்லிம்களையும் வேட்டையாடி வருகிறது. இத்தகைய காவல் துறையை, தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக நிலை நிறுத்தினாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கேடும் இல்லை.

தலித் விரோதி என்றோ, சாதி இந்து ஆதரவாளர் என்றோ ஞாநியைக் குற்றம் சுமத்த இயலாது. ஆனால் அவரது ‘நடுநிலை' வழுவாமை கேள்விக்கிடமற்றது அல்ல. ‘ரத்தம் ஒரே நிறம்' என்ற தலைப்பில் ("குமுதம்' 26.11.2008) அவரால் நிரப்பப்பட்டுள்ள "ஓ' பக்கங்களிலிருந்து சில கேள்விகள். "பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் சாதி உணர்ச்சி' என்று அவர் எழுதுகிறார், அது கிராமங்களில் மட்டும் தானா? கும்பகோணம், மயிலாப்பூர், நங்கநல்லூர் போன்ற மாநகரங்களில் ஊட்டப்படுவதெல்லாம் ஆட்டுப்பாலா-"ஆ'வின் பாலா? ஏன் நியூஜெர்சியில் இருக்கும் அம்பிகள் பிறக்கும் போதே பெப்சி-கோக் தானா?

“ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லக்கண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை'' என்கிறீர்கள். ஜாதி அமைப்புகள் எப்போதும் மாமனிதர்களை உருவாக்க முடியாது. ஆனால் சமூகங்கள் தான் மனிதர்களை உருவாக்குகின்றன. மனிதர்களாக மட்டுமே எடுத்துக் கொண்டால், நல்லக்கண்ணுவை உருவாக்கியது, அவரது சாதி அல்ல; கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் கே.ஆர். நாராயணனை உருவாக்கியது அவர் பிறந்த சமூகம். சாதி வெறியர்கள் மனிதர்களாக உருவாக்கப்படுவதற்கு அச்சாதிகளில் இடமில்லை.

தமிழகமே பதற்றத்தில் ஆழ்ந்திருந்த போதும், சென்னை எருக்கஞ்சேரி சிக்னல் அருகே அரசுப் பேருந்து ஒன்றை நவம்பர் 13 அன்று அதிகாலையில் தீ வைத்துக் கொளுத்தியதாக ‘அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்' என்ற அமைப்பின் மாநில செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பத்து தலித் தோழர்களை காவல் துறை கைது செய்தது. “எங்கள் இன மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீ வைத்தேன்'' என அவர்களில் ஒருவர் வாக்குமூலம் தந்திருப்பதாக ("தினத்தந்தி' 14.11.08) காவல் துறை வழக்குப் பதிந்தது. தாக்கப்பட்டவர்கள் சாதி இந்துக்கள்; தாக்கியவர்கள் தலித்துகள் என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டிற்குள் (‘தேவர்' நூற்றாண்டு கொண்டாடப்பட்ட காலம்) மட்டும் இக்கலவரத்தில் படுகாயமுற்ற பாரதி கண்ணன் தலைமையிலான சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களைத் தாக்க திட்டம் தீட்டி, முயன்று முடியாமல் கடைசி முயற்சியில்தான் இக்கலவரம் வெடித்துள்ளது.

poster எண்ணிக்கை அளவில் தலித் மாணவர்கள் அதிகமாயிருந்தும் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதலுக்குத் தயாராக வந்த சாதி இந்து மாணவர்கள் அப்பாவிகள் அல்ல. திருப்பித் தாக்கியிராவிட்டால் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை' என சட்டக் கல்லூரிக்குள் அமைப்பு நடத்தி வந்திருக்கும் பாரதி கண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் பத்து தலித் மாணவர்களையாவது தாக்கியிருக்க முடியும். அப்படி தாக்குதலுக்கு உள்ளானவர்தான் தலித் மாணவர் சித்திரைச் செல்வன். கல்லூரிக்குள் கத்தியோடு தேர்வு எழுத வந்ததையும், கலவரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சில ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.

இக்கலவரத்தின் மூல காரணமாக நிலை கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சொல்வதானால்-பசும்பொன் முத்துராமலிங்கத்தின் "குருபூஜை' கொண்டாட்டங்களே. சாதி வெறிக் கொண்டாட்டமாக, தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகளைக் கட்டவிழ்ப்பதற்கென்றே ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இக்கொண்டாட்டத்தைத் தடை செய்ய அல்லது குறைந்த பட்சம் அரசு எந்திரம் இதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதென கடந்த ஆண்டு "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, முத்துராமலிங்கம் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக பரமக்குடி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து முதுகுளத்தூரில் தலித் ஆசிரியர் வின்சென்ட் கொல்லப்பட்டதும் நடந்தது.

தமது மக்களுக்கு சாதி வெறியூட்டவே, அரசியல் ரீதியாக தேவர் சாதித் தலைவர்கள் இவ்விழாவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இதன் விளைவை "தேவர் திருமகனாரின்' வளர்ப்புப் புதல்வி செல்வி ஜெயலலிதாவே அனுபவிக்க நேர்ந்தது அவலம்தான். இத்தலைவர்களின் அரசியல்-பொருளியல் பயன்களுக்காகப் பலிகடா ஆக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அம்மக்களே. தன்னைத் தாக்க வந்தவர்கள் தி.மு.க. வினர் என "புரட்சித் தலைவி' குற்றம் சுமத்தினாலும்-அவர்களும் தேவர் சாதியினரே என்பதை மூடிமறைக்க இயலுமா? என்ன செய்வது, வளர்த்த கடா மார்பிலே பாய்கிறது.

காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, தேவர் சாதியினரின் திட்டமிட்ட வன்முறைகள்-பசும்பொன் முத்துராமலிங்கம் காலத்திலிருந்து, அரை நூற்றாண்டிற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் காவு வாங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பட்டியலிட்டு மாளா. ஆனாலும் தென் மாவட்ட தலித் மக்கள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் காலத்திலிருந்து ஒருங்கிணைந்து திருப்பித் தாக்கத் தொடங்கி, இன்று வரையான தேவர் சாதி வெறியர்களின் ‘விழுப்புண்'களை செய்தி ஊடகங்கள் சேகரித்து இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டால்-தேவர் சமூகத்தின் "வீரம்' வீதிக்கு வரும். எல்லா சாதிகளிலும் தனிப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள் உருவாகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி இந்துக்களின் குற்றங்கள், சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு நெடுக நிகழ்ந்து வரும் தங்களின் விடுதலைக்கானப் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அறம் வழுவி நிற்பதில்லை. ‘நிகரற்ற' கொடுமையாகப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் நீங்கா இடம் பெற்று விட்ட சட்டக் கல்லூரி சம்பவத்தில் கூட, எவரும் கொலை செய்யப்படவில்லை-அதற்கான வாய்ப்பிருந்த போதும். எதிர்வினை செய்யும் போதும் "ஒடுக்கப்பட்ட மனம்' கொலை வெறியுடன் செயல்படுவதில்லை. மனிதாபிமானிகளே! இந்தக் கோட்பாடு உங்கள் "மூளை'க்கு உறைக்கிறதா? உயிர்ப் பிறப்பின் இத்தார்மீக நெறியே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பலமும் பலவீனமும் மட்டுமல்ல; இருப்பும் வீழ்ச்சியும் கூட.

இங்கு வன்முறையை ஒரு "காட்சி இன்பமாக' தமிழ்த் திரைப்படங்கள் கட்டமைத்து வெகுநாட்களாகிவிட்டன. அந்த இன்பத்தில் ஊறித் திளைத்திருக்கும் சாதியத் தமிழ்ச் சமூகத்திற்கு இப்பதற்றம் கூட, சில நாட்களில் அதே வகையான இன்பமாகவும் மாறக்கூடும்.இலங்கை இனப்படுகொலை, பூகம்ப சரிவுகள், சுனாமி பிணங்கள், நாள்தோறும் அரங்கேறும் குண்டு வெடிப்புகள் என வண்ணமயமான, வகைவகையான காட்சிப் படிமங்களில் ஊறித் திளைத்து நுகர்வு வெறி கொண்டலையும் சமூகமல்லவா இது. "ஜாதி' எனும் உணர்வே, பேரின்பமாக ஊறித் ததும்பும் இந்த சமூகத்திற்கு, இக்காட்சிகள் வெறியூட்டுவதற்கு மாறாக, குற்ற உணர்ச்சியையும், ஜாதி (தன்) வரலாற்றின் மீதான மறுபரிசீலனையையும் எழுப்புவதுதான் நியாயமாக இருக்க முடியும்.

சாதி இந்துக்கள் என்ற வகையினத்துள் வரும் அனைத்து சாதிகளும் "மனு' விதிகளின்படி தீண்டாமை விலக்குப் பெறுவதால் கிடைக்கும் சமூக பலத்தை அனுபவித்தே வருகின்றன. இந்த சமூக பலத்தினையும்-இருப்பையும் இழக்காதவரை, எந்தவொரு தனி மனித சாதி இந்துவுக்கும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் துயரமும் வலியும்-புரிதலுக்கும் உணர்தலுக்கும் அப்பாற்பட்டதே. ஏனெனில், அது முழுமையாகவும் இறுதியாகவும் அனுபவித்தே பெறப்படுவது. தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதி இந்துவாகப் பிறக்க நேர்வதும், வாழ்வதும் ஒருவருக்கு இந்திய (இந்து) சமூகம் தரும் முதல் தர பாதுகாப்பு வளையம். அதிலும் பார்ப்பனராகப் பிறப்பதோ பெரும் பேறு! ஒடுக்கப்பட்ட மக்கள் பிறப்பிலேயே பாதுகாப்பற்றவர்களாக, சமூக பலம் இழந்தவர்களாக, தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக "வாழ' நிர்பந்திக்கப்படுகிறார்கள். சேரியில் அல்லது வாழப் பொருத்தமற்ற இடங்களில் உழல நேர்ந்தால் மட்டுமே இதை உணர முடியும்.

ambed இறுதியாக, இக்கட்டுரையின் முடிவுரையாகவோ அல்லது தலித் இளைஞர்களுக்கான பின் குறிப்பாகவோ இது இருக்கட்டும். தலித் வரலாற்று மாதங்களைக் காகிதங்களில் பதிவு செய்து, காயம் படாமல் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ரவிக்குமார்களின் அறிவுரைகளிலோ, எழுச்சித் தமிழர்களின் "தேசிய இன' அதிர்ச்சிகளிலோ கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. சொந்த மக்களிடமே நாணிக் கோணி, வம்பு வழக்குகளில் "சாதியவாதி'யாகி, விற்று விலை பேச சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கலாம். பிழைப்புவாதம் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. ஆளும் வர்க்கம் அள்ளித்தரும்; ஆதிக்க சாதியினர் அரவணைத்துக் கொள்வர் என்ற மாய்மாலங்களில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்களை, விடுதலைப் பாதைக்கு அழைத்து வர வேண்டியது போராளிகளின் கடமை.

மய்ய நீரோட்ட அரசியலின் "கீழான' அனைத்து உபாயங்களையும் அவர்தம் அரசியல் அணிகள் கற்றுத் தேறுவது, சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை உருத்தெரியாமல் அழிக்க வகை செய்கிறதே என்ற சமூகப் பதற்றமும் அறச் சினமும் தான் நமக்கிருக்கிறதேயன்றி வேறல்ல. நம் மக்களின் பசி வரலாற்றுப் பசி; நம் தார்மீகக் கோபம் வரலாற்றுக் கோபம்; நம் தலைமுறையின் தாகம்; வரலாற்றுத் தாகம். சமரசமற்ற விடுதலைப் போராட்டமே தலித் மக்களின் முன் நிபந்தனை. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைப் பாத்திரம் அரசியல் நிபந்தனை. நமக்குத் தேவை முற்று முழுதான விடுதலை. அதற்கு ஒரு முழு தலைமுறையும் தியாகம் செய்ய வேண்டுமென்றார் அம்பேத்கர். அடிமைகள், விடுதலையைப் பிச்சையாகப் பெற இயலாது என்றும் அறிவுறுத்தினார். நம் மூதாதையரைத் தாக்கி விட்டு, எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை வழியெங்கும் சேகரித்துக் கொண்டு-நமது விடுதலைக்கான களம் நோக்கிப் பயணிப்போம்.

-தலித் முரசு

நவம்பர் 2008