Thursday, April 5, 2007

ஏக‌லைவா

பார்ப்பன-சத்திரிய-வைசிய-சூத்திர வருண அநீதிப் படிநிலையில் தீண்டத்தகாதோர் என விலக்கிவைக்கப்பட்ட பஞ்சமர் எனக் குறிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒருங்கிணைக்கும் வலைத்தள சமூகப்புலம் இது।

இந்தியத் துணைக்கண்டத்தின் ஆதிக்குடிகளாக இனவரைவியல் நியதிப்படி இம்மண்ணின் முற்றுரிமை பெற்ற பூர்வகுடி மக்களாம் ஒடுக்கப்பட்ட மற்றும் மலையின மக்களின் வாழ்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தகவமைவு உள்ளிட்ட வரலாற்று வெளியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய அவசியமானதொரு கால கட்டத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறோம்.

தொழில்முறை வேலைப்பிரிவினையாகப் பகுக்கப்பட்டிருந்த சமூக குழுக்களின் மீது படையெடுத்து வந்த ஆரிய மற்றும் இதர வந்தேறிகள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு ஏவிய வன்முறைகளாலும் பின்னிய சூழ்ச்சிகளாலும் ஆதிக் குடிமக்கள் தமக்குள் ஒன்றிணைய வாய்ப்பில்லாத நிரந்தர ஏற்றத்தாழ்வுகளை சுமந்து சாதிய சமூகங்களாக / குழுக்களாக இறுகிப்போயினர். வரலாற்றுக் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் அந்நிய படையெடுப்புகள் முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாதிக்க நவீன யுகம் வரை சாதி என்னும் படிமம் எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகாத வகையில் தொடர்ந்து சூழ்ச்சிகளால் பேணப்பட்டுவருகிறது. காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கேற்ப சாதி என்னும் படிமம் பார்ப்பன இந்துமத உளக்கிடக்கையின் ஆழ்மன சாரமாகவும் புறவய சமூக வெளியின் தார்மீக நியாய‌மாகவும் பலம் பெற்று வருகிறதேயொழிய, அதன் அடித்தளததை அசைக்க விழையும் அனைத்து மாற்று சிந்தனைகளையும் இதர ஆன்மீக செயலாக்கங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் தன்னகத்தே உள்வாங்கி அதற்கேயுரித்தான புதைகுழி போன்றதான நெகிழ்வுத் த‌ன்மையோடு த‌ன் அகோர‌ப் ப‌சியின் வாய் பிள‌ந்து இம்ம‌ண்ணின் பெரும் ச‌வ‌க்குழியாய் இன்னும் காவு கேட்கிற‌து ந‌ம்மை.

சாதியைப் பாதுகாக்கும் மின்சார‌ வேலியென‌ ம‌னித‌ ம‌ன‌ங்க‌ளை ஊட‌றுத்து பின்ன‌ப்ப‌ட்டிருக்கிற‌து ‘தீண்டாமை’ எனும் இழை. ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ பூர்வ‌குடி ம‌க்க‌ளுக்கும் வந்தேறி ஆக்கிர‌மித்த‌ சாதி இந்துக்க‌ளுக்கும் இடையில் நிக‌ழ்ந்து வ‌ரும் தொட‌ர் போராட்ட‌ங்களை ம‌றைத்து, இம் ம‌ண்ணின் வ‌ர‌லாறென‌ உருவக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் அனைத்துப் பொய்மைக‌ளையும் த‌க‌ர்க்கும் பொருட்டு, மாற்று அர‌சிய‌ல் க‌ண்ணோட்டத்துடன் க‌லை-இல‌க்கிய‌-சிந்த‌னை த‌ள‌த்தில் செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌ முக்கிய‌த்துவ‌ம் க‌ருதி, ‘ஏக‌லைவா’ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குர‌ல் த‌ன் ப‌ணியை துவ‌ங்குகிற‌து.

இந்திய‌த் துணைக்க‌ண்ட‌ ச‌மூக‌த்தின் பார‌ம்ப‌ரிய‌ பெருமித‌ங்க‌ளை புக‌ழ்ந்துரைக்கப்ப‌டும் புராண‌ இதிகாச‌ பொய்மைக‌ளிலிருந்து தொட‌ங்கி இம் ம‌ண்ணின் பூர்வ‌குடி ம‌க்க‌ளின் வ‌ர‌லாற்றை மீள் உருவாக்க‌ம் செய்வ‌தே ஆக‌ப் பொருத்த‌மென‌க் க‌ருதியே பார்ப்ப‌ன‌ துரோண‌னால் ச‌தி செய்து பார‌ம்ப‌ரிய‌ திற‌மையும் ம‌ர‌புரிமையும் ப‌றிக்க‌ப்ப‌ட்டு வ‌ந்தேறிக‌ளின் அதிகார‌ம் நிறுவ‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துருவாக்க‌த்தின் மீட்புக் குறியீடாக‌வே ந‌ம் ஆதிக்குடிம‌க‌ன் ‘ஏக‌லைவ‌னின்’ பெய‌ர் தாங்கி வ‌ல‌ம்வ‌ர‌த் துவ‌ங்குகிற‌து இவ்வ‌லைத்த‌ள‌ம்.

பார‌ம்ப‌ரிய‌ வில்வித்தையில் தேர்ந்த‌ ஏக‌லைவ‌னின் வீர‌த்தையும், திறமையையும் புக‌ழையும் எதிர்கொள்ள‌ அஞ்சி, ச‌தி செய்து அவ‌ன‌து க‌ட்டைவிர‌லை வெட்டி எறிந்த‌ பார்ப்ப‌ன‌ ச‌த்ரிய‌ ஓநாய் கூட்ட‌ம் என‌ ம‌றுவாசிப்பு செய்கிற‌து ந‌ம் சிந்த‌னை.

பூர்வ‌குடி ம‌க்க‌ள் ச‌தி‍-சூது அறியாத‌வ‌ர்கள், பொய்மை-புர‌ட்டு தெரியாத‌வ‌ர்கள், வ‌ன்ம‌ம்-வ‌ஞ்ச‌க‌ம் புரியாத‌வ‌ர்க‌ள். ஆக‌வே எதிரிக‌ள் வீழ்த்தின‌ர். ந‌ம் ம‌க்க‌ள் உழைப்பும் உண்மையும் ம‌ட்டுமே அறிந்த‌வ‌ர்க‌ள், நிராயுத‌பாணிக‌ள். த‌ம‌க்கான‌ வாழ்வை, அர‌சிய‌லை, வ‌ர‌லாற்றை மீட்டெடுக்கும் திசை வ‌ழிக‌ளில் திணறி வ‌ருப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்காக‌ எழுதுவோம், உரையாடுவோம், ஒருங்கிணைவோம். வீழ்த்த‌ப்ப‌ட்ட‌ ச‌திக‌ள் அறிந்து, எதிரிக‌ளின் வ‌ன்ம‌ம் புரிந்து ந‌ம‌க்கான‌ க‌ருத்திய‌லை ஆயுத‌மாக்குவோம். பார‌ம்ப‌ரிய‌ உரிமைகளை மீட்டெடுப்போம், இழந்த‌ அதிகார‌த்தை முன்னெடுப்போம்.